Thursday, January 31

முற்றுப் பெறாத காதல்

மெதுவாக எட்டி எட்டிப் பார்த்தமானிக்கு “காமாட்சியக்கா வந்துடக்கூடாதுன்னு” சாமி கும்பிட்டபடி மரத்துக்குப் பின்னாடி நின்னிட்டு இருந்தேன்.

“ஏ! யாரை புள்ளை பார்த்துக்கிட்டே நிக்குறே?” அப்படின்ட்டு வந்தா ராசாத்தி.

“காமாட்சியக்கா தான். அவங்க வந்தா, ‘வெரசா நட, வெரசா நட’ ன்னு சொல்லிப்புட்டே இருப்பாங்க. அதான் அவங்க போனபுட்டு போகலாம்னு நிக்கேன்”. அவளுக்கு பதில் சொல்லிட்டு இருக்கும் போதே “தனம், தனம்” ன்னு அக்கா சத்தம் கேட்டுச்சு.

இப்ப என்ன பண்ண? அக்கா கூடவே போய்தான் ஆகணும்.. ஸ்கூலிலிருந்து எங்க வீட்டுக்கு நடந்து போக அரைமணி நேரம் ஆகும். ஆனா அக்காகூட வந்தா 20 நிமிஷத்துலேயே போயிருவோம். என் வீட்டுக்கு ஐஞ்சு வீடு தள்ளித்தான் காமாட்சியக்கா வீடு இருக்கிறதால அம்மை அவிக கூடத்தான் வரணும்ன்னு சொல்லியிருக்கு.

பிள்ளையார் கோயில் முக்குத் திரும்புனவுடனேயே ஒரு அண்ணாச்சி வடை, பஜ்ஜி எல்லாம் சூடா போட்டு விப்பாங்க. ஆனா அக்கா அதை வாங்கவே விடாது, அதுவுமில்லாம, வழியில ஏதாவது கடையில ஜில்லுன்னு பானைத்தண்ணி குடிக்கலாம்; பாய் கடையில டபுள் கலர் மிட்டாய் வாங்கி சாப்பிடலாம்; புதுப்பட போஸ்டர் ஒட்டியிருந்தானா வாய் பார்க்கலாம்; ஆனா அக்கா எங்கனயும் நிக்காம விறு விறுன்னு எங் கையைப் பிடிச்சிகிட்டு நடக்கும், ராசாத்தியைக் கூப்புட அவங்க அப்பா வருவாங்க, சிலநாள் என்கூட வருவா. இன்னைக்கு அவங்கப்பா வரலைங்கிறதால நானும் அவளும் போயிடலாமுன்னு இருந்தோம், அக்கா பார்த்துடுச்சு.

அக்கா கூட நீலவேணிக்காவும் வந்தாங்க. இரண்டு பேரும் பதினொண்ணாப்பு படிக்கிறாங்க. நானும் ராசாத்தியும் ஐஞ்சாப்பு படிக்கிறோம் அவிக ரெண்டு பேரும் பேசுறது எங்க ரெண்டு பேருக்கும் தெரியக்கூடாதென்னு எப்பவும் குசுகுசுன்னு பேசிட்டே தான் வருவாங்க. எனக்கா தெரியாது, எங்க வளவில இருக்குற குமார் அண்ணனும் காமாட்சியக்காவும் ரகசியமாகப் பாத்துக்கிடதும், சிரிச்சுக்கிடதும். நீலவேணிக்கா வீடு புட்டாரத்தியம்மன் கோயில் தெருங்கிறதால அவங்க அங்ஙனயே திரும்பிடுவாங்க. ராசாத்தியும் குத்தாலரோடுமுக்குல திரும்பிடுவா. அதனால எங்க தெருவில போறப்போ நானும் அக்காவும் தான் போவோம்.

எங்க தெரு வார்ற வரைக்கும் அக்கா விறுவிறுன்னு நடக்கும். தெரு திரும்பிட்டோம்... அம்புட்டுதேன், அக்கா வேற அக்காவா மாறிடும். அக்கா பார்க்க அம்புட்டு அழகா இருக்கும். குமார் அண்ணனும் நல்லாத்தான் இருப்பாங்க. ஆனா அக்காகிட்டே பார்க்கும் போது சுமார்தான். தெருமுக்குத் திரும்பும் போதே அரிசி மண்டி கிட்டே இருந்து அண்ணன் பின்னாடி வர ஆரம்பிச்சுருவாங்க. அக்காவும் திரும்பித் திரும்பி பார்த்துட்டே வருவாங்க. அவங்க கண்ணிலே அப்படி ஒரு சந்தோஷம் தெரியும். எங்க வளவுகிட்டே வரும் போது குமார்அண்ணன் எங்ககூடவே வந்துடுவாங்க. எங்கூட பேசிற மாதிரி அவுக இரண்டு பேரும் பேசிக்கிருவாங்க.


இன்னைக்கும் நானும் அக்காவும் விறுவிறுன்னு நடந்து வந்துட்டோம். எனக்கு எப்பவுமே அக்கா கையைப் புடிச்சுட்டு நடக்க இஷ்டமே இருக்காது. அதனால தெரு வந்துட்டா கையை உதறிட்டு ஓடிடுவேன். இன்னைக்கும் அப்படித்தான், கையை உதறிட்டு ஓட ஆரம்பிச்சேன். ஆனா தெருமுக்கு திரும்பும்போதே ஏதோ வித்தியாசமாப் பட்டுச்சு.

அக்காவைப் பார்த்தா மூஞ்சி உம்முன்னு இருக்கு. அப்பத்தான் கவனிச்சேன் குமார் அண்ணனைக் காணோம். சரிதான்னு நெனைச்சுகிட்டு வீட்டுக்கு ஓடினேன். நல்லபசி. ஆச்சி கடையில அம்மையை சுசியம் வாங்கியாற சொல்லணும்.

‘என்ன இது வீட்டுக்கிட்டே இம்புட்டு கூட்டம். வளவில நுழையவே முடியலை’. எல்லாரும் கத்தி கத்தி ஒரே அழுகை. அப்பத்தான் யாருக்கோ என்னமோ ஆச்சுன்னு வெளங்கிச்சு. ஐயையோ! அம்ம வேற நேத்து இருமிட்டே இருந்தாளே! பயத்தில யம்மா, யம்மா ன்னு கத்திட்டே போறேன். எதிர் வீட்டு மாரியம்மா அத்தைதான் என்னைக் கூட்டிட்டு அம்மாகிட்ட போச்சு. நல்லவேளை அம்மைக்கி ஒண்ணும் இல்லை.

அம்மையை இறுக்கக் கட்டிபிடிச்சுகிட்டேன். அப்ப, காமாட்சியக்காவும் வந்துட்டாங்க.

“என்ன மதினி, என்னாச்சு?” ன்னு அம்ம கையைப் பிடிச்சுகிட்டாங்க.

“நம்ம பழனிஅண்ணாச்சி இரண்டாவது மவன் இல்ல, அதாம்மா, குமார், அவன், பெரியவன் ஏதோ ஏசிட்டான்னு மருந்து குடிச்சிட்டான். ஹைகிரவுண்டு தூக்கிட்டு போனாங்க. வழியிலேயே... இன்னும் வீட்டுக்கு வரல” என்றபடி அழ ஆரம்பிச்சுட்டா.

எனக்கும் அழுகையா வந்தது, அக்காவை பாக்கவே முடியலை. நான் ரொம்ப அழவும்,
“ஏம்மா, காமாட்சி, தனம் ரொம்ப அழுறா. ஒண்ணுமண்ணா பழகின பயல்ல, ‘அண்ணே அண்ணே’ ன்னு பின்னாடியே சுத்திட்டு இருப்பா! நீ கொஞ்சம் அவளை உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ! அங்ஙனயே தூங்கினாத் தூங்கட்டும். நான் இங்கே குமாரம்மா கூட இருக்கேன்”

அக்காவும் அழுதுட்டே சரின்னு சொல்லிச்சு. எனக்கு இப்ப அக்காவோட கையைப் பிடிக்கணும் போல இருந்துச்சு. கையை இறுக்கி பிடிச்சிகிட்டேன்.

மஸ்கட் ஃபெஸ்டிவல்

ஒவ்வொரு வருடமும் மஸ்கட்டில் நம்ம ஊர் பொருட்காட்சி போல Jan - Feb மாதங்களில் மஸ்கட் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் நடக்கும். இந்த வருடம் கிட்டத்தட்ட 5 இடங்களில் நடந்து வருகிறது. நாங்கள் ஒரே ஒரு இடம் (Azaiba) அஸைபா விற்கு சென்று வந்தோம்.

எல்லா இடங்களிலும் தினமும் 4.30 இலிருந்து 11 மணி வரை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும். Circus Show, Russian Skill Show, Fire Show, Omanis music Bands, Popular Plays in multi languages, Kite Show, Childrens activities..... பொதுவாகக் குழந்தைகளுக்கு Fun Rides ம் பெரியவர்களுக்கு Challanging rides ம் இருக்கும்.

Food Court பற்றி கேட்கவே வேண்டாம். நம்ம ஊர் பஞ்சுமிட்டாய், மசாலா தோசையிலிருந்து லெபனான், சைனீஸ், KFC ... வரை எல்லா உணவு வகைகளும் கிடைக்கும். (என்ன, இந்த வருடம் எல்லாமே கொஞ்சம் விலை அதிகம்.)






இந்த வாணவேடிக்கை வாரம் இரு நாட்களில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 5 - 10 நிமிடங்கள் நடக்கும்.


எனக்குக் கோபம் வருகிறது, உங்களுக்கு?

ஜனவரி 27, 2008 அன்று வெளியான ஜூவியில் "கட்டப்பட்ட காந்தியின் கண்கள்" என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக "PETA" கன்ற அமைப்பைச் சார்ந்த ஒரு வெளிநாட்டுப் பெண்மணி (இன்க்ரீட் நியூக்ரீக்) கோவையில் காவல்துறையின் கண்களை மறைத்து விட்டு காந்திஜியின் சிலையின் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டிவிட்டாராம்.
ஜல்லிக்கட்டினால் யாருக்கு ஆபத்து என்கிறார்கள்? மாடுகளுக்கா? இல்லை மனிதர்களுக்கா? மாடுகளுக்குத் தான் என்றால், எந்த மாடுகளுக்கும் உயிர்ச்சேதம் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. (தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) மனிதர்களுக்கு என்றால் ஜல்லிக்கட்டினால் மட்டும் தான் உயிர்ச்சேதம் ஏற்படுகிறதா? (என்னங்கடா டேய்?) வெள்ளைக்காரங்க மற்ற நாடுகளில் புகுந்து பண்ணுகின்ற அட்டூழியங்களுக்கு கறுப்புத் துணி கட்டவேண்டியதுதானே!

ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு. அதற்கு வேண்டிய பாதுகாப்பைச் செய்து அதை ஒரு பெருமைக்குரிய விளையாட்டாக, விஷயமாக மாற்றாமல் ஜல்லிக்கட்டு என்றாலே கேவலமாக எண்ணவைத்து விட்டவர்களை நினைத்தால் எனக்குக் கோபம் வருகிறது? உங்களுக்கு?

தடை

மஞ்சு விரட்டு
வழுக்கு மரம்
உறியடி எளவட்டக்கல்
அனைத்தும்
தடை செய்யப்பட்ட பின்
நாம் ஒருவருக்கொருவர்
ரக்ஷா கட்டிவிட்டு சாயம் பூசிக்கொண்டு
பேல்பூரி தின்றுகொண்டே மெஸேஜ் அனுப்பலாம்

-செல்வேந்திரன் (நன்றி : ஆனந்தவிகடன் ஜனவரி 30, 2008)
(இந்த கவிதையைப் படிக்கும் போதும் இயல்பாய் எனக்குக் கோபம் வருகிறது, உங்களுக்கு?)

ஒருத்தனும் ஒருத்தியும்

கதவைத் திறந்து கொண்டு வேகமாக நுழைந்தவள் அதே வேகத்தில் கதவை மூடினாள். அதுவரை அடக்கி வைத்திருந்த பாரமெல்லாம் வெடிப்பது போல் அழ ஆரம்பித்தாள்.

“சந்துருவா இப்படி? அவனை நம்பினது எல்லாம் பொய்யா? நான் ஏமாந்துட்டேனா? எங்க காதலுக்குத் துரோகம் பண்ணலாமா?” மனது எத்தனையோ கேள்வி கேட்டாலும் பதில் ஒண்ணுதான். அந்த பதிலை ஏத்துக்க முடியாமல் தான் அவள் மனம் தவித்தது.

அப்போது கையிலிருந்த கைபேசி அழைத்தது. அப்போது தான் அலுவலகத்தில் விடுப்பு சொல்லாமலே வந்தது உறைத்தது. அவளுடைய பாஸ் தான் பேசினார்.

“என்னம்மா, வீட்டுக்கு போயிட்டீயா? அதையே யோசிச்சுட்டு இருக்காதே. சாதாரணமாக கூட சந்துரு அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வந்திருக்கலாம், கொஞ்சம் பொறுமையா இருந்துக்கோ, நான் நாளைக்குக் கூப்பிடுறேன்.” என்று கட் பண்ணிட்டார். செல்லை ஆஃப் செய்தாள். இப்போதைய மனநிலையில் அவளுக்கு யாரிடமும் பேச மனம் இல்லை.

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன்னால் இவளோட பாஸ் தான் சந்துருவுக்காக இவகிட்ட 1 மணிநேரம் பேசி சம்மதிக்க வைத்தார். சந்துரு அவருக்குத் தூரத்துச் சொந்தம். அதுவுமில்லாம அவனோட நல்ல குணமும், அவர்கிட்ட அவனுக்கு இருக்கிற மரியாதையும் அவனோட காதலுக்காக அவரை தூதராக்கியது.

திருமணமான இந்த இரண்டு வருடங்களில் இருவரும் “ஐ லவ் யூ” சொல்லாத நாட்கள் ஒன்றிரண்டு தான் இருக்கும். அந்த நாட்களில் கூட வேறு ஏதாவது வார்த்தைகளில் காதலைச் சொல்லியிருப்பார்கள். போன மாதம் கூட அவளோட அம்மா வந்திருந்த போது இவள் முன் மண்டியிட்டு “ஐ லவ் யூ மதி” என்று சொல்ல அம்மா வெட்கப்பட்டு உள்ளே ஓடினாள்.

‘இன்று காலையில் ஆபிஸ் போனவுடனேயே பாஸ் கூப்பிட்டு “என் கூட நீயும் கான்ஃபெரன்ஸ் வாம்மா” என்று சொன்னவுடன் போனதுதான் தப்பு. அந்த ஹோட்டலுக்குப் போகாமல் இருந்திருந்தால் நான் சந்துருவை அந்த பொண்ணோட பார்த்திருக்கவே மாட்டேன். இப்படி இடிஞ்சு போயிருக்கவும் வேண்டாம்’ . மதியால் ஒண்ணும் யோசிக்கவும் முடியலை; யோசிக்காமல் இருக்கவும் முடியலை.

“அந்த பொண்ணு யாரா இருக்கும்? பார்த்த மாதிரியே இல்லையே; அவர்கள் நடந்து போன விதமும், ரிசப்ஷனிஸ்ட் அவங்களைப் பார்த்து கையசைத்த விதமும் தினமும் வர்றவங்க மாதிரியில்ல இருந்தது. சந்துரு கிட்ட நான் எப்படி கேட்பேன்?” யோசிக்கும் போதே அவளுக்கு அழுகை வந்தது. அவளைத்தவிர இன்னொரு பொண்ணை நேசிக்க எப்படி அவனால் முடியுது? அது தாங்கிக்கிடவே முடியாத விஷயமாகத் தோன்றியது. இதைப் பற்றி அவள் யாரிடம் பேசுவாள்? இந்த 2 வருடங்களில் சந்துரு மட்டுமே அவளது நண்பனாகிப் போனான். இப்போது மதிக்கு மட்டுமல்ல இன்னோர் பொண்ணுக்கும் அவன் தான் எல்லாம் என்பதை ஏற்றுக் கொள்ளும் தைரியம்தான் அவளுக்கு இல்லை.

சந்துருவுக்கும் வேறேதோ பொண்ணுக்கும் கல்யாணம் என்றவுடன் அவசரமாக கோயிலுக்கு ஓடினாள். அங்கே சந்துரு அந்தப் பெண்ணோடு சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். இவளைக் கண்டுகொள்ளவே இல்லை. இவள் சந்துரு என்று கூப்பிடவும், ஐயர் அவன் கையில் தாலியைக் கொடுக்கவும் சரியாக இருந்தது. ‘ப்ளீஸ், வேண்டாம் சந்துரு’ என்று அழுதபடியே அவள் ஓட வழியில் இருந்த நிலைப்படி தட்டி கீழே விழ,
‘மதி எழுந்திரு, என்ன ஆச்சு?’ என்ற சந்துருவின் குரல் கேட்கவும் அவளுக்கு ஒரு நிமிடம் ஒண்ணும் புரியவில்லை.

“என்னம்மா? உன் செல்லுக்கு கூப்பிட்டால் எடுக்கலை. ஆபிஸ்ல கேட்டா, நீ வீட்டுக்கு போயாச்சுங்கிறாங்க. சரி வீட்டுக்கு கால் பண்ணினாலும் பதில் இல்லை. இப்ப என்னடான்னா இப்படி முழிக்கிற. என்ன ப்ராப்ளம்?”

தூக்க கலக்கம் முற்றிலும் கலைய, கண்டது கனவு என்பதும் புரிய மெதுவாய் எழுந்து உட்கார்ந்தாள். வாட்சைப் பார்த்தாள். மணி நான்கைத் தாண்டியிருந்தது. இரண்டு மணிநேரமாகத் தூங்கியிருக்கிறாள்.

அவள் அருகில் அமர்ந்து தலையை மெதுவாகக் கோதி விடுபவனைக் கண்டதும் மீண்டும் கண்ணில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அவள் அழுததைப் பார்த்ததும் பொறுக்க முடியாதவனாய்,

“என்னடா, விஷயம் என்ன?, எனக்குத் தெரியாம எந்த விஷயம் உன்னைக் கஷ்டப்படுத்துது? எதுவா இருந்தாலும் ஷேர் வித் மீ” என்றபடி அவள் கண்ணைத் துடைத்தான்.

சாய்ந்து கொள்ள தோள் கிடைத்தும், ஆறுதல் தேட முடியாமல் அவன் கையைத் தட்டிவிட்டாள். ஒரு நொடி யோசித்து, அவனிடமே கேட்டு விடலாம் என்று முடிவெடுத்தாள்.

“இன்னைக்குக் காலையிலே ஹோட்டல் ராம் வந்திருந்தோம். அங்கே உங்களைப் பார்த்தேன்.”

“ஹோட்டல் ராம்! ஓ! சரி, என்னைப் பார்த்ததுக்கா இவ்வளவு சோகம்? விஷயத்துக்கு வா”

அவன் கண்ணை நேராகப் பார்த்து, “உங்களைத் தனியா பார்க்கலை. கூட ஒரு பொண்ணோட பார்த்தேன். அந்தளவு நெருக்கமாக உங்க இரண்டு பேரையும் பார்த்த பிறகு எனக்கு... ”, குரலும் கண்ணும் அவளை முடிக்கவிடவில்லை. முகத்தை மூடியபடி அழ ஆரம்பித்தாள்.

“ம்...! உங்க பாஸ், அதான் என்னோட மாமா எல்லாம் சொன்னார். எப்படி உன்னாலே என்னைப்போய் சந்தேகப்பட முடியுது? குட், வெரிகுட்” என்றபடி நகர்ந்தான். சற்றுதூரம் சென்றவன் திரும்பி வந்து,

“ஆமா! அந்த பொண்ணுகூட என்னைப் பார்த்தேல்ல, அப்பவே வந்து என்கிட்டே கேட்க வேண்டியதுதானே! நீ என்னை சந்தேகப்பட்ட பிறகு நான் என்ன விளக்கம் சொன்னாலும் நீ நம்ப போறியா? நீ நம்பலைன்னாலும் ஒண்ணு சொல்றேன். ஐ லவ் யூ, ஐலவ் யூ வெரிமச், இந்த வார்த்தையை உன்னைத் தவிர வேற யார்கிட்டேயும் நான் சொன்னதே இல்லை.” என்றபடி படுக்கையில் விழுந்தான்.

ஐந்து நிமிட அமைதிக்குப் பிறகு, மெதுவாய் அவனை அழைத்தாள்.

“சந்துரு, உன்னை ரொம்ப நம்பப் போய்தானே நான் இப்படி தவிக்கிறேன். நான் உன்னை சந்தேகப்படுறது மட்டும் தான் உனக்கு தெரியுதா? அந்தப் பொண்ணு உன் தோளிலேயும், நீ அவ இடுப்பிலேயும் கை போட்டு போறீங்க! என்னால அதை எப்படி தாங்கிக்கிற முடியும்?” என்று கேட்டாள்.

சந்துரு ஒன்றும் பேசாமல் இருக்கவும், அவனை உலுக்கினாள். மெதுவாக கண்ணைத் திறந்தவன், “அவ என்னோட க்ளைண்ட், லஞ்சுக்குப் போனோம், தனியா இல்லம்மா. நாலு பேர் போனோம். இந்தம்மா கொஞ்சம் டிரிங்ஸ் எடுத்தாங்க, ஒத்துக்கலை, என்னமோ மாதிரி ஆகி நிக்கவே முடியலை. ஸோ, நான் தான் கூட்டிட்டு போய் டாக்ஸியிலே ஏத்தி விட்டேன்.” என்றான்.

இவள் பேச ஆரம்பிப்பதற்குள், “ ஆனா, நீ இதை நம்புவியான்னு எனக்குத் தெரியலை. வேணும்னா, ஹோட்டல்ல நீ யார்கிட்டேன்னாலும் என்கொயர் பண்ணிக்கலாம், நானே கூப்பிட்டுட்டு போறேன்.” என்றவாறு அவளைப் பார்த்தான்.

“சாரி சந்துரு, நான் என்ன பண்ணினா நீ என்னை மன்னிப்பே?”

“இல்லை மதி, எனக்கு மனசே சரியில்லை, நீ என்னை சந்தேகப்படுற, அப்படிங்கறதை என்னால் ஏத்துக்கவே முடியலை. என் கூட சாய்ராம் வந்தான். அவன் கூட கிண்டலா, “இப்ப மதி பார்த்தா சந்துரு தொலைஞ்சான்” அப்படின்னு சொன்னப்போ கூட நான் அவனைப் பார்த்து சிரிச்சேன்.”

“தப்புதான், ப்ளீஸ், என்னை மன்னிச்சுடுப்பா!” என்றபடி அவன் கைகளை எடுத்து தன் கன்னங்களில் வைத்தபடி மதி கெஞ்ச,

இன்னும் மன்னிக்காமல் இருக்க அவன் என்ன முட்டாளா?

“ஐ லவ் யூ” என்றான் மீண்டும் ஒருமுறை!