Tuesday, February 12

உறவாகிப் போகும் நட்புகள்

தலைப்பைப் பார்த்ததும் நட்புக்காக வக்காலத்து வாங்கும் பதிவு என்றெண்ணி வந்திருந்தீர்களேயானால் மன்னிக்கவும்! இது உறவுகளுக்காகப் பேசப் போகும் பதிவு.. அதற்காக நட்பே வேண்டாம் என்று சொல்ல வரவில்லை நட்பு போதும், உறவே வேண்டாம் என்று சொல்லி வருபவர்களுக்காக சில வார்த்தைகள்.

நமக்கு பள்ளி, கல்லூரிகளில் தான் நட்பு என்பது அறிமுகம். அதற்கு முன்பு உறவுகள் தான் நமக்கெல்லாமே. அந்த உறவுகள் தான் நமக்கு பலவற்றைக் கற்றுக் கொடுக்கிறது. அந்த உறவுகளை வேண்டாம் என்று சொல்லக் கூடிய தைரியத்தையும் அவைதான் தருகின்றன.

நமது அப்பா அல்லது அம்மா வின் நெடுங்கால நண்பர்கள் நமது வீட்டுக்கு முதன்முதலாக வரும்போது “யாரோ வந்திருக்காங்க” என்று சொல்லும் வாய் அவர்களே இரண்டாம் முறை, மூன்றாம் முறை வரும் போது, ‘மாமா/அத்தை’ என்றோ ‘அங்கிள்/ஆன்ட்டி’ என்றோ அழைத்து விடுகிறது. அப்படி நாம் அழைக்கவில்லை என்றால் அவர்கள் நமக்கு அந்நியப்பட்டு விடுகிறார்கள்.

அவ்வளவு ஏன்?, நமது நண்பர்களை நம் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தும் போது கூட ‘அங்கிள்/ஆன்ட்டி’ அல்லது ‘மாமா/அத்தை’ என்று தான் சொல்லுகிறோம். “ஹலோ Mr.------” என்று பெரியவர்களை அழைக்கும் கலாச்சாரம் இன்னும் நமது நாட்டை எட்டிப் பார்க்கவில்லை என்பது நல்ல விஷயமாகத் தான் எனக்குப் படுகிறது.

எல்லாரும் அவரவர் தோழி/தோழன் வீட்டில் பழகும் போது அவர்களுடைய அம்மாவை அம்மா என்று அழைப்போம். அப்படி அழைக்காதவர்கள் 30% தான் இருக்கும். அவர்கள் ‘ஆன்ட்டி’ என்று அழைப்பார்கள். நண்பனின் தங்கையைத் தனது தங்கையாகவோ இல்லை சிலர் காதலியாகவோ நினைப்பார்கள். இன்னும் ஏன், அவர்களின் சொந்தக்காரர்களைக் கூட அதே உறவுமுறைகளைக் கொண்டு நாம் அழைக்கிறோம்.

இப்படி எல்லாரையும் நமது உறவாகவே எண்ணுவதால் தான் அவர்கள் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். இன்னும் எங்கள் தெருவில் எனது அம்மாவை ‘அக்கா’, ‘மதினி’, ‘அத்தை’, ‘பாட்டி’, ‘அம்மா’ என்று அவரவர்க்குத் தகுந்தாற்போல் உறவுமுறை சொல்லித்தான் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம் கல்லூரிகளில் ஆயிரம் பேர் இருந்தாலும் நமது நண்பர்கள் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள். அதற்காக மற்றவர்களை நாம் வெறுப்பதில்லை. அதே போல உறவுகள் ஆயிரம் இருந்தாலும் நெருக்கமானவர்கள் ஒரு சிலர் தான். அதற்காக ‘மற்றவர்களை நாம் வெறுப்பதில் என்ன நியாயம்’ என்பது தான் என் கேள்வி.

ஒரு தோழி/தோழன் நமக்கு ஏதாவது உதவி செய்தால் எவ்வளவு நன்றியுணர்வோடு இருக்கிறோம்? அதே உதவிகளை நமது உறவுகள் செய்தால், ‘அவர்களின் கடமை’ என்று எவ்வளவு எளிதாகத் தள்ளிவிடுகிறோம்.
பொதுவாக உறவுகளைப் பற்றி ‘என்னைப் பார்த்து பொறாமைப் படுறான், சார்!’ என்று சொல்வது வழக்கம். அவர்களை விட நீங்கள் மேம்பட்ட நிலையில் இருந்தால் இயல்பாகவே ஒரு பொறாமை எட்டிப் பார்க்கத் தான் செய்யும். ‘நண்பர்களுக்குள் பொறாமை இல்லை’ என்று தயவு செய்து சொல்லாதீர்கள். ஒரு ஏழை தோழி/தோழன் ‘எங்க வீட்டில் ரொம்ப கஷ்டம்’ என்று சொல்லும் போது இயல்பாகவே அவர்கள் மேல் பரிதாபப்பட்டு உதவுவோம். அதே சமயம் பணக்கார நண்பன் ‘எங்கள் வியாபாரம் ரொம்ப நஷ்டத்தில் நடக்கிறது’ என்று சொன்னால் அதற்காக உதவுபவர்கள் எத்தனை பேர்? உதவவில்லை என்றாலும் பரிதாபமாவது படுவோமா?
“நல்லா விடுறான் கதை” என்று எளிதில் சொல்லிவிடுவோம்.

எல்லா உறவுகளுமே சிக்கல் நிறைந்தது தான். நட்பு மட்டும் விதிவிலக்கல்ல. முதன்முதலாக நம்மைப் பார்க்கும் ஒருவர் “என்னங்க இவ்வளவு அசிங்கமாக டிரஸ் பண்ணியிருக்கீங்க?” என்று கேட்கிறார். இன்னொருவரோ “உங்க டிரஸ் ரொம்ப அழகா இருக்கு” என்று சொல்கிறார். உண்மை எதுவாகவோ இருக்கட்டும், அடுத்த நாள் நாம் யாரைப் பார்த்து சிரிப்போம்? நமக்கு யார் ஒத்து வருகிறார்களோ அவர்களிடம் நமக்கு நட்பு பாராட்டத் தோன்றுகிறது. மற்றவர்களை ஒதுக்குகிறோம். இப்படி தேர்ந்தெடுக்கும் வசதி உறவுகளில் இல்லை என்பதால் அவர்களை வெறுக்க ஆரம்பிக்கிறோமோ?

நீங்கள் சொல்லும் “நண்பர்கள் மட்டுமே நம்மால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்” என்ற வாக்கியம் முற்றிலும் உண்மை. நண்பர்களை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு என்றுள்ள உறவுகள் இப்போது விட்டால், பின்பு அமைய வாய்ப்புகள் குறைவு.
இப்போது அம்மா/அப்பா/அண்ணன்/அக்கா/தம்பி/தங்கை என்றிருப்பவர்கள் தான் பின்னாளில் நமது குழந்தைகளுக்கு பாட்டி/தாத்தா/மாமா/அத்தை/சித்தி/சித்தப்பா என்ற உறவுகள் ஆகின்றன என்பதை நாம் ஏனோ மறந்துவிடுகிறோம்???

நட்புகளையே உறவுகளாக ஆக்கிக் கொள்ளும் நம்மால் ஏன் நமக்கென்றுள்ள உறவுகளைக் கொண்டாடத் தெரியவில்லை?

Thursday, February 7

எந்த சாமி நல்ல சாமி

இன்னைக்கு மல்லிக்குக் கணக்கு பரீட்சை. போன தடவை போல் இல்லாமல் இந்த தடவை எப்படியும் பாஸாகிடணும் என்ற படியே சர்ச்சுக்குள் போனவள் சிலுவையைப் போட்டுவிட்டு வெளியே வந்தாள். “ஐயையோ! ஸ்கூலுக்கு நேரமாச்சு” என்று ஓட ஆரம்பித்தவள் முக்கினிலிருந்த நாயக்கரம்மா வீட்டு பிள்ளையாருக்கு 3 தோப்புக்கரணம் போட்டாள். “பாஸாகிட்டே, 108 போடுறேன்” என்று டீல் முடித்துக் கொண்டு திரும்ப ஓட ஆரம்பித்தாள்.

அவளுக்கு இந்த தடவ நம்பிக்கை இருக்கு. நாலு மாசத்துக்கு முன்னாடி இருவத்தியஞ்சு வந்தாலே பெரிய விஷயம். ஒருநா பக்கத்தில இருந்த சர்ச்சுக்குப் போனா. அதுவும் இந்த துரைப்பய தான் கூட்டிட்டு போனான். அங்கே எல்லாரும் சத்தமா சேர்ந்து பாடறதைப் பார்த்து இவளுக்கு ஆச்சரியமா இருந்தது. துரையைப் பாரத்து அவன் பண்றாப்பலே பண்ணினா. அந்த தடவ கணக்குல நுப்பது வந்துச்சு..

அதுக்கப்பறம் இயேசு போட்டோ ஒண்ணை துரை கையைகாலைப் புடிச்சு வாங்கிட்டா. இயேசுவை மட்டும் கும்பிட்டா எப்படி? “வீட்டுலே இருக்குற என்னைக் கும்பிடாம, வேற சாமியக் கும்புடுறியா?”ன்னு பிள்ளையார் வந்து கனவுல கேட்க பிள்ளையாருக்கும் மூணு மூணு தோப்புக்கரணம் போட்டுட்டு இருக்கா.

அப்படியும் ரெண்டு மாசமா நுப்பதைத் தாண்டலை. ஆனா அவளும் விடாம சர்ச்சுக்கும் கோயிலுக்கும் ஓடிட்டுதான் இருக்கா.

அப்பத்தான் அவளுக்கு ஒண்ணு உறைச்சது. அவ கிளாஸ் நசீமா மட்டும் கணக்குல ஃபெயில் ஆனதே இல்லை. ஆனா அவளுக்கு சயின்ஸ்ல சரியா நுப்பத்தியஞ்சு தான் எடுப்பா. அதைப் பத்தி நமக்கென்ன, அப்படின்னுட்டு அவகிட்ட “நீ என்ன சாமி கும்புடுவே ?” ன்னு மெதுவா கேட்டா.

அவுக மசூதிக்கெல்லாம் போவ மாட்டாங்களாம். வீட்டுலே தான் தொழுவாங்களாம். அவங்க அம்மாகிட்ட கெஞ்சிக் கூத்தாடி அவங்க தொழும் போது கூட இருக்க சம்மதம் வாங்கிட்டா. இந்த மாசம் முழுசும் அல்லா கிட்டேயும் தொழுதாச்சு. இடையில நாலஞ்சு நாள் மட்டும் போக முடியலை. அவங்க வாப்பா இருந்தாரு. அவரு எப்பவும் முறைச்சுட்டே இருக்கிறதுனாலே இவ போகல.

என்ன இருந்தாலும் இயேசுவையும், பிள்ளையாரையும் மறக்கக்கூடாதில்லே, அதான் சர்ச்சுக்கும், கோயிலுக்குமா ஓடிட்டு பரீட்சை எழுதப் போனா.


பின்குறிப்பு: அந்த பரீட்சையிலே நுப்பத்தி நாலுதான் வந்துச்சாம். அந்த நாலு நாளும் தொழாம விட்டதுதான் தப்புன்னு புலம்பிட்டு இருந்தா. இப்பல்லாம் நானு அவ கூட பேசுறதே இல்ல.

Monday, February 4

மஸ்கட் தமிழ்ச்சங்கம்

மஸ்கட் தமிழ்ச்சங்கம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நடைபெறும்.

இந்த வருடம் கடந்த வார வெள்ளிக்கிழமை(Feb 1) மிகக் கொண்டாட்டமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் கலந்து கொண்டன.

Muscat Cicilization Club என்ற இடத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் குழந்தைகள், தம்பதியர், வயதானவர்கள் என்று அனைவருக்கும் தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டது, மெகா போட்டியாக ‘தம்போலோ’ நடத்தப்பட்டது, பரிசு, ‘ Air Arabia Return ticket to Chennai. 2 பேருக்குக் கிடைத்தது.

சென்ற வருடம் போட்டிகள் அல்லாமல் பம்பரம்விடுதல், ஏழுகல், கில்லி போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இந்த வருடமும் அதேபோல் கும்மி, பச்சைக்குதிரை போன்றவை நடத்தப்பட்டன.

அது மட்டுமல்லாமல் மதிய உணவு, மாலை தேநீருடன் சிற்றுண்டி வழங்கப்பட்டது, விடைபெறும் சமயம் Gift hampers ம் அளிக்கப்பட்டது.

எல்லாவற்றையும் விட முக்கியமானது, அன்றைய குளிரும், காற்றும். விர்,விர் என்று கடல்காற்று சுழன்றதில் மக்கள் நடுங்கி விட்டனர், மஸ்கட்டில் கடல் எனக்குத் தெரிந்து ஒரு பெரிய குளம் போல இருக்கும்.(அளவில் அல்ல!) அலையே இல்லாமல், சப்தமுமில்லாமல் அமைதியாக இருக்கும், ஆனால் அன்று கடற்கரையில் நின்ற போது திருச்செந்தூரில் நிற்பது போல் அலையும், சப்தமும் ஆகா!

வந்திருந்த அத்தனை பேரும் சொன்னது, “இத்தனை வருஷமா மஸ்கட்டில் இருக்கிறோம், இந்த மாதிரி காற்று பார்த்ததே இல்லைப்பா,”

(Gonu - Cyclone க்கு அப்புறம் மஸ்கட் பருவ நிலையில் நிறைய மாற்றங்கள்!)


உங்கள் பார்வைக்கு...