Wednesday, April 13

வாழ்த்துக்களுடன் ஒரு விஷயம்

சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள்.
சில பதிவர்களின் எழுத்து நெடுநேரம் நம்மை யோசிக்க வைப்பதுண்டு. சிலரின் நடை நம்மையும் அறியாமல் வாய் விட்டுச் சிரிக்க வைப்பதுண்டு. சிலரின் எழுத்துகள் எதுவும் செய்யாமல்  போவதும்  உண்டு. ஆனாலும்  ஒரு  சிலரின் எழுத்துகள் நம்மை முகம் சுளிக்க வைப்பதுண்டு.
பிளாக்கரில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றாலும் சில பல விஷயங்களைப் படிக்கும் போது,மக்கள் மொழி நாகரிகம் என்பதையே மறந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. 
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
இந்தக் குறள் யாருக்குத் தெரியாது என்றாலும் தமிழில் எழுதும்  அனைத்து  பதிவர்களுக்கும்  தெரிந்தே  இருக்கும். நம்முடைய  எழுத்தும்  கொஞ்சம்  இனிமையாக இருக்கலாமே!
அப்புறம் ஒரே ஒரு சின்ன விஷயம், 'ற்' என்ற ஒற்றெழுத்து வரும் போது இதன் பக்கத்தில் வேறெந்த ஒற்றெழுத்தும் வரக்கூடாது என்பது தமிழின் இலக்கண விதி. அதாவது ஏற்பாடு என்பது சரி. ஏற்ப்பாடு - தவறு.
an apple என்றுதான் எழுத வேண்டும். an ball, an cat, an dog என்று எழுதினால் உங்களுக்கு ஒரு நெருடல்  தோன்றுவதைப்  போல  நீங்கள் ஏற்ப்பாடு என்று எழுதும் போது எங்களைப் போல தமிழ் ப(பி)டித்தவர்களுக்கு  ஒரு  நெருடல்.  ஆதலினால்  மாநிலத்தோரே   தமிழின் இலக்கணத்தையும் கடைப்பிடிப்போமே!