Thursday, December 24

வெல்லற்கரியோர் என்று எவரும் இல்லை


வெல்லற்கரியோர் என்று எவரும் இல்லை


புவிதனில் நான் இறுமாந்திருந்தேன்..
பின்னால் வந்தவனும் அப்படியே - என்
முன்னால் நின்றவனும் அப்படியே...
இன்னும் எத்தனைபேர் வந்தாலும்
இருப்பை அகற்றும் எண்ணம் இல்லாமல்...

எத்தனை காதலர்கள் எத்தனை தம்பதியினர்.. என் மடியில்
எத்தனை சண்டை எத்தனை சமாதானம் என் கையில்
வார்த்தைகள் மட்டும் வேறு வேறாய்
உருவங்கள் மட்டும் புதிது புதிதாய்...

சிறிதாய் பெரிதாய் புல்லும் பூண்டுமாய்
சுற்றிலும் உயிர் நிறைந்ததாய்  நானிருந்தேன் பூரிப்புடன் வெல்லுதற்கரியதாய்....

என்னில் ஒர் துண்டு, இரும்புக்கரம் கொண்டு
என்னையே வீழ்த்த வந்தான்...
இறுமாந்திருந்தேன் நான்...
வெல்லுதற்கரியதாய்...

முதல்அடி விழுந்ததும் பதறின பறந்தன
முட்டையிட்டு குஞ்சு பொறித்த புள்ளினங்கள்..
இரண்டாம் அடிக்கு ஓடி ஒளிந்தன பொந்துவாழ் விலங்குகள் ...
மூன்றாம் அடியில் என் பச்சை நரம்பு
பார்த்தவுடன்தான் பொறி கலங்கியது எனக்கு..

வெல்லுதற்கரியவன் என்று எவரும் இங்கில்லை
எவரிருந்தாலும் வெல்வோன் ஒருவன் உண்டு..

புரிந்தேன் தத்துவமதை...
ஆனாலும் என்னை வென்று
என்னைப்போல் பலர் வென்று
இம்மானுடன் சாதித்தது என்ன?
வெல்லுதற்கரியவன் அவன் என்ற எண்ணமா?
அவனியே அவனுக்குத்தான் என்ற இறுமாப்பா?

என்னுடன் வெட்டப்பட்ட இயற்கையே
அவனை வெல்லும்  வலியவன்..
உணர்ந்தால் வாழ்வான்.
வாழும்போது உணர்வான்...
வெல்லற்கரியோர் என்று எவரும் இங்கில்லை...