Wednesday, January 20

புதுமைப் பெண்ணின் பேனாவும் புதுக்கவிதையும்.....


எழுதலாம் என்ற எண்ணமே இல்லாமல்
எடுக்கும் பேனாவும் டைரியும்
என்னைப் பார்த்து

என்ன எழுதப் போகிறாய்?
என்ன வேண்டுமென்றாலும் எழுது...
எண்ணத்தை மட்டும் எழுதாதே...
எண்ணிய எண்ணங்கள் எல்லாம்
எழுத நீ ஒண்ணும்
பாரதி கண்ட புதுமைப்பெண்ணல்ல வெறும்
பாத்திரம் துலக்கப் பிறந்தவள்தான்..

வேண்டுமானால்
பாத்திரம் துலக்குவதிலும்
துணி துவைப்பதிலும்
பண்ணிக்கொள் புதுமை..
இன்னும் வேண்டுமானால்
பிள்ளை வளர்ப்பதையும்
பாயாசம் வைப்பதையும்
சேர்த்துக்கொள்..
மீறி ஏதும்
புதுமைகள் செய்துவிடாதே....

இனி எழுது உன்
புதுக்கவிதையை
கவனமாக!!
என எச்சரித்தது..

Friday, January 15

தைப்பொங்கல்.....





அமேசானில் ஆர்டர் செய்து வாங்கிய
அம்சமான சுடிதாரில்
ஃபளிக்கர் ஆஃபரில் கிடைத்த
புது குக்கர், கேஸ் அடுப்பில்
பாலிஷ் செய்யப்பட்ட
பச்சரிசி இட்டு
இனிப்பு நீக்கிய வெல்லமிட்டு
கொழுப்பு நீக்கிய பாலிட்டு
ஒரு ஸ்பூன் நெய் இட்டு
அரை முந்திரியிட்டு
செய்து இறக்கிய பொங்கலை

ஆதவன் வந்து அரைநாள் ஆன பின்பு

அவனுக்கும் கண்ணில் காட்டி
மீதி அரைநாளை
தொலைக்காட்சியில் தொலைத்து.....
நாகரீக நவநாகரீக பொங்கல் ஐயா
எம் வீட்டில்.....

மஞ்சு விரட்டு,
வாடிவாசல் மாடுவிரட்டு
இரண்டாம் வருடமாய்
இல்லையென்ற போதும்
என் சகோதரிகளின் கண்ணீர்
சூட்டில் வேகும் பொங்கல்
நிஜ பொங்கல் ஐயா.....

பொங்கலுக்கு வாழ்த்துவதா....
போராட்டத்துக்கு வாழ்த்துவதா.....
பழக்கதோஷம்....
பொங்கல்நல் வாழ்த்துகள் தோழியரே....


 

Sunday, January 3

சுட்டும் விழி



மான் விழி என்றாய் - உன்னைக் கண்டு மருளும் விழி என்றாய்
மீன்விழி என்றாய் – உன்னிலிருந்து மீளா விழி என்றாய்
அன்பு விழி என்றாய் - உன்மேல் பாயும் அம்பு விழி என்றாய்
மோக விழி என்றாய் - உன்மேல் தீரா தாக விழி என்றாய்
கருணைவிழி என்றாய் – உன்னைக்காணும் காதல் விழி என்றாய்.
சாந்த விழி என்றாய் - உன்னைக் கவர்ந்த காந்த விழி என்றாய்.

என் விழிகளை ஏதேதோ புகழ்ந்தாய் என்னென்னவோ பாடினாய்
பாடினவற்றுள் பிடித்தது எது எனக்கேட்டாய்....
என்னை நீ கேக்க எனை முந்தி பதில் உரைத்தது என் விழி...
என்புற அழகைப் புகழ்ந்த  என் தலைவா  -  நீ அறிவாயா?
அழகென்பது புறம் அல்ல, அகம்..
என்விழிகளின் அக அழகு - இதோ
விரிக்கிறேன் பார்..விவரிக்கிறேன் கேள்...

மூடிய விழிகளால் மெய்யுரைக்க முடியாதென்று
திறந்தே உறங்கும் சுட்டும் விழி நான்!!

சிறுமை கண்டு – உலகின் சிறுமை கண்டு சீற்றம் கொள்ளும் சுட்டும் விழி நான்!!

பேயும் இரங்கும் பெண்மைக்கு பங்கமென்றால்
தீயாய் சுடும் சுட்டும் விழி நான்!!

 உலகைக் காக்கும் உத்தமர்களின்
 உன்னத‍த்திற்கோர் கேடென்றால்
உழன்று கொதித்திடும் சுட்டும் விழி நான்!!

இன்றுவரை போராடி தன்னைக் காக்க
இனியும் போராடும் இயற்கைக்கோர் இன்னலென்றால்
இரைந்தொலிக்கும் சுட்டும் விழி நான்!!

 பூவாய் போற்றிடும் பிஞ்சுமனதில் நஞ்சு விதைக்கும்
வஞ்சகனாம் அரக்கர்தம்மை
வெந்திடச் செய்யும் சுட்டும் விழி நான்!!

களவும் கற்று மறக்கச் சொன்ன
எம் தமிழன்னைக்கு ஓர் இழுக்கென்றால்
எரிதழலாகும் சுட்டும் விழி நான்!!