Thursday, September 28

பாடல் - திருச்செந்தூரான் முருகன் மேல்

நின் பொற்பாதமே அல்லால்
வேறொன்றும் எனைக் காத்தருளுமோ - இறைவா

பிறவி சாகரத்தில் மூழ்கும் என்னை
உன் பூங்கரங்கள் மட்டும் தாங்கிப் பிடித்தருளும்.

என் எண்ணங்கள் எவர்வழி சென்றாலும் எதன்வழி சென்றாலும்
உன்வழி தொடரந்தே வந்திடும் எப்போதும்..

ஆனந்தமாய் உனைப் பாடவெண்ணி அமர்ந்திட்டேன் - இருந்தும்
உனை நினைக்கின் உள்ளம் உருகி  கண்ணில் நீர் பெருகுதப்பா.

பகுத்தறிவாளனாய் மாறவும் முயன்ற எனை பிடித்திழுக்கிறாய்..
இன்னமும் தெரியவில்லை -  நீயெனைக் கட்டியிழுக்கும் மாய வித்தைதனை!

நீ போடும் மாயமந்திரமே எனைக் காக்கிறதேயன்றி
நான் தினமும் உச்சரிக்கும் மந்திரங்கள் அல்ல!

பாடவும் தெரிவதில்லை.. மந்திரங்களும் புரிவதில்லை..
முருகா என்றும் கந்தா என்றும் 
உனையழைத்தலின் பொருட்டும் - 
உனை நினைத்தலின் பொருட்டுமே
இன்னமும் நான் எனும் நானானவள் நீந்துகிறேன்..
இப்பிறவிப்   பெருங்கடலை!!!