Monday, December 17

என்னைப் பொறுத்தருள்வாய் சிவனே...


ஆதியும் அவனே
அந்தமும் அவனே
ஒளியும் அவனே
இருளும் அவனே

புகழும் அவனே
இகழ்வும் அவனே
மலையும் அவனே
மடுவும் அவனே

புன்னகையும் அவனே
கண்ணீரும் அவனே
சொல்லும் அவனே
செயலும் அவனே

பாசமும் அவனே
பந்தமும் அவனே
விருப்பும் அவனே
வெறுப்பும் அவனே

கல்லும் அவனே
புல்லும் அவனே
தீதும் அவனே
நன்றும் அவனே

புயலும் அவனே
தென்றலும் அவனே
தாயும் அவனே
தந்தையும் அவனே

ஈசனும் அவனே
ஈஸ்வரியும் அவனே
நானும் அவனே
நீயும் அவனே
எல்லாம் அவன்தான் எனில்..

இன்னும் எனக்கு
ஊனக்கண் எதற்கு?
ஆசைகள் எதற்கு?
எதிர்பார்ப்பு எதற்கு?
ஏமாற்றம் எதற்கு?

வெற்றிகள் எதற்கு?
தோல்விகள் எதற்கு?
உறவுகள் எதற்கு?
பகைகள் எதற்கு?

உறக்கம் எதற்கு?
விழிப்பு எதற்கு?
ஆட்சி எதற்கு?
அதிகாரம் எதற்கு?

யோகமும் தெரியாது
வேதமும் தெரியாது
கண்மூடி அமர்ந்து செய்யும்
தவமும் தெரியாது
ஏதும் தெரியாத நான்
எல்லாம் அறிந்த அவன்

எப்போதும் என்னைப் பொறுத்தருள்கிறான்..
இப்போதும் பொறுத்தருள்வாய்
என் சிவனே!!!
ஓம் நமசிவாய....
----கோகிலவாணி கார்த்திகேயன்---

Wednesday, October 24

முதுகாய் இருக்க முயற்சிப்போம்


மலைமேல் ஓர் குடில்..
மலையின் முதல் படியோ
சற்றே உயரமாய்..
மற்ற படிக்கட்டுக்கள்
ஏறுவதற்கு இலகுவாய்..

முதல் படி ஏற
முயற்சித்த மக்கள் ..
கீழே விழுந்த வண்ணம்.....

காட்சியைக் கவனித்தபடி இருந்த
ஒரு முதுகு
எவரையும்  கேட்காமல்
தானே  குனிந்தது.

முதுகில்  முதல் அடியும்
மலையின் படியில்
அடுத்த அடியும் வைத்தபடி
மக்கள் மலையேறினர்.
மலையேறும் போது
ஒருவருக்கொருவர் உதவியபடி.

குனிந்த முதுகுக்கு
குடிலுக்கு போக விருப்பம்..
இருந்தும்
குனிந்தபடி இருந்தது.

இடும்பை தாங்காது
இடுப்பை நிமிர்த்தலாம்
என்னும் போது
ஒரு கை மட்டும்
ஆதரவாய் அவ்வப்போது
நீவி விடும்.

நெடுநாள் ஆனது..
முதுகுக்கு ஓர் எண்ணம் உதித்தது.
குனிந்தே இருத்தலின்
குட்டியாய் படியொன்று
இருந்திட்டால்..
நீவ வந்த கையிடம்
வைத்தது இந்த வேண்டுகோள்.
குனிந்தபடியே படியும்
தயாரானது.

மக்களும் படிக்கு பழகிவிட
முதுகு நிமிர்நதது.
குனிந்தபடி இருந்ததால்
சிறிது ஓய்வெடுக்க

மேலேறிய மக்களோ
கீழ் இருந்த முதுகை
கீழ்மையாய் கண்டனர்.
நீவிய கையும் கூட சேர
தவித்த முதுகு
தாழ்ந்தது இன்னும்.

அப்போது நிகழ்ந்தது
அற்புதம்.
அன்புக்கரமொன்று
குடிலிலிருந்து நீண்டது.
குனிந்து முதுகை நிமிரச் சொன்னது.
நிமிர்ந்ததுதான் தெரியும் அடுத்த
நொடி குடிலில்..

மலையுயரம் கண்டு
மலைத்தபடி மக்கள்
இன்னும் ஏறியபடி.
குனிந்து முதுகு கீழிருப்பதாய்
இன்னும் எண்ணியபடி

மக்கள் குடிலடைய
மாற்றுவழி சிந்தித்தபடி
குடிலின் குளுமையில்
அருள்கரத்தின் ஆதரவில்
அமைதியாய் முதுகு....

 


Wednesday, October 17

#Me too - #என்னையும் தான்

இரு வார்த்தை தான் - ஆனால்
இந்தியாவையே அசைத்தபடி!!
சில ஆண்களின் சபலம்
அவர் புகழை
சிலுவையில் அறைந்தபடி!!
இருக்கட்டும்....

பெண்ணொருவர் சொன்னபடி ..
'மன உறுதி பெண்களிடம்
கண்ணீர்க் கதைகள் இல்லை.
மாறாய் அவனை(ரை)
அடித்து விரட்டிய
குறுஞ்செய்தி மாத்திரமே...'

எனக்கும் இதுவே கருத்து.
தொட்ட ஆணின் சட்டை இறுக்கும்
உறுதியான கைகள் இல்லைதான்
தொட்ட ஆண் தொட முடியா
உயரத்தில் உள்ளபோது..
அவன்(ர்) உயரத்திற்கு
ஏறிய பின் சட்டை பிடிக்கலாம்
என்பது முறைமையோ?

பெண்ணைச் சிறுமைப்படுத்தும்
ஆண்கள் எவரும் முத்துக்கள் அல்லர்.
அவர்புகழ்பாட வரவில்லை
எவரும் இங்கே..

கரடிகளைக் கண்டதும்
சிவபூசையையே
நிறுத்தும் போது,

புலிகளைக் கை காட்ட மட்டும்
காலநேரம் வேண்டுமா?

ஒவ்வோர் துறையாய்
உயர ஏறியபின்
கைகாட்டுதல் முறையா?

பலியாடாய் இருந்தும்
பழிவாங்கப்படுதல் பெண் மாத்திரமே...
முதல்முறை வாய்மூடினால்
முப்பது முறையும் வாய்மூட வேண்டுமே?
இனியாவது...

"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்."

வள்ளுவன் சொன்னதுதான்.
செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாதவைகளால் நாமும் கெடுவோம்..
நம் புகழும் கெடும்..
 

Monday, September 24

புறம் வேண்டாம்

'சும்மா இரு' என்றது மனம்

'சும்மாயிருத்தலின்
தொலைக்காட்சி காணலாம்'
என்றது அறிவு.

தொலைக்காட்சியில் பெரிய முதலாளி இல்லம்  காணின்
இணையம் மேல் என்றது.

இணையத்தின் கைகளிடம்
கைதியாதலின் 
தோழியரிடம் கதைக்கலாம் என்றது.

முடித்தவுடன் தோன்றியது...
புறம் பேசுதலின்
சும்மா இருந்திருக்கலாம் என்று.. .

இதைத்தான் நான் முதலிலேயே சொன்னேன்;
சும்மா இரு என்றது மனம் ..

Monday, September 3

அறம்


நம்மிடம் கையேந்துபவர்களிடம்

கொடுக்க ஒன்றுமில்லா நிலையிலும்

கனிவுடனும் இனிமையுடனும் புன்னகையுடனும்

கனிந்த பார்வையை ஈதல் ஓர் அறச் செயல்.

 

இல்லாளை நோகாது

இயல்பாய் அன்பு செய்தலும் ஓர் அறச்செயல்.

கல்வி கேள்வி பொருள் என பெற்ற செல்வங்கள் இருந்தும்

கால் நிலத்தில் இருத்தல் ஓர் அறச்செயல்.

 

தேர்வெழுதும் சமயத்தில் தெரியாத கேள்விகளை

தெரிந்தவரைக் கேட்டு எழுதாது வருவதும்

ஒர் அறச்செயல்.

 

பொய் சொல்லும் இடத்தும்

 பொய் சொல்லாதிருத்தல் ஓர் அறச்செயல்.

இங்கொன்றும் அங்கொன்றும் பேசி

இல்லாததை உண்டு என்றும்

இருப்பதை இல்லை என்றும் பேசாதிருத்தல் ஓர் அறச்செயல்.

 

எதிராளியை அடக்கும் கணத்திலும்

இன்று போய் நாளை வா என்பது ஓர் அறச்செயல்.

பாற்கடல் கடைய பொங்கிய நீலத்தை

கண்டத்திலே அடக்கியதும் ஓர் அறச்செயல்.

 

நம்மை நோக்கி வீசப்படும் கேள்விக் கணைகள்

நம்மை அவமதிப்பதற்காகவோ - இல்லை

உண்மையில் உண்மையைத் தெரிந்து கொள்ளவோ?

ஐயமின்றி பயமின்றி பதிலளித்தலும் ஓர் அறச்செயல்.

அடுத்தவர்க்கு தொல்லை எனும் போது

ஆரவாரம் செய்யாது அடங்குதலும்

ஓர் அறச் செயலே.

 

இன்னும் எத்தனையோ..

இந்த அறச்செயல்களை செய்ய நமக்கு

கால நேரம் வேண்டுமா?

எப்போதும் மாசற்ற மனமிருக்க

மனதில் அறம் இருக்க

செய்யும் செயல் யாவும் அறச்செயலே!
 

Wednesday, May 2

வாழ்க்கைப் பாதை


பிரபஞ்சத்திடம் கேள்; கிடைக்கும் என்னும் த‍த்துவமே மிக தாமதமாகத்தான் எனக்கு தெரிந்து புரிபட்டது. கேட்டால் கிடைக்கும் என்பது மெய்தானா? சில கிடைத்த‍து. இருந்தும் சில சந்தேகங்கள். நமக்கு வேண்டியவற்றைத்தான் நாம் கேட்கிறோமா? இல்லை நமக்குத் தேவையானவற்றைக் கேட்கிறோமா? எந்தக் குழந்தையும் நல்ல உணவைக் கேட்பதை விட உடலுக்குத் தீது விளைவிக்கும் பிடித்த உணவைத்தானே கேட்கும். இப்படி நாமும் இந்தப் பிரபஞ்சத்தின் முன்பு குழந்தைகள்தானே... வேண்டியது கேளாமல் , பிடித்ததைக் கேட்கும் குழந்தைகள்தானே. பிரபஞ்சம் என்பதை உணரமுடியா குழந்தைகள்.

மாற்றி யோசித்தேன். நமக்காக நாம் யோசித்து, பிரபஞ்சத்திடம் கேட்டு, சில சமயம் நடந்து, பல சமயம் நடவாமல், அதற்கு ஊழினையும் விதியையும் காரணஞ் சொல்லி... ஏதோ ஒரு குழப்பம் என்னுள்.. அதற்குப் பதிலாக நமக்காக இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒன்றை நமக்காக ஏற்கனவே திட்டமிட்டு வைத்துவிட்டது. எப்போதும் போல நமது ஊன அறிவு அதனை நம்ப மறுக்கிறது. ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அதன்படி நடக்கவும் மறுக்கிறது.

இங்கு பிரச்னை என்னவென்றால், அப்படி ஒரு பாதை இருப்பதை உணர ஞானம் வேண்டும். அந்த ஞானம் எல்லாருக்கும் இயல்பிலேயே வருவதில்லை. என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பதினாறு பதினேழு வயதுகளில் ஒரு புள்ளியோ கோடோ நமக்கு எப்படியோ உணர்த்தப்படுகிறது. அதைச் சரியாக புரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையின் பாதையைப் பற்றி அவர்கள் பயணத்தைத் தொடருகிறார்கள். இடை இடையே வரும் தடைகள் கூட இறைமையால் அனுப்பப்படும் யாரோ ஒருவர் மூலம் அதுவாக நீங்கும். நிரம்ப அலட்டிக் கொள்ள வேண்டாம். அந்தப் பிறவியை அன்பாக, அழகாக, ஆத்ம சாந்தியுடன் கடக்கின்றனர்.

ஒருவேளை நமக்கான பாதை உணர்த்தப்பட்ட பின்பும், குழந்தைகள் போல முரண்டு பிடித்து, நமக்கு பிடித்த வேறு ஒரு பாதையை நாமே தேர்ந்தெடுத்தால் என்ன ஆகும்? பாதை விலகிய நம்மை,, மிகவும் கடினப்பட்டு போராடி, மீண்டும் நமக்காய் உணர்த்தப்பட்ட பாதையில் நம்மைக் கொண்டும் சேர்க்கும் பெரும் பொறுப்பை பிரபஞ்சம் எடுத்துக் கொள்கிறது. இப்போது, நாமாய் தேர்ந்தெடுத்த பாதையில், இடையூறுகள் அதிகம் வந்த வண்ணம் இருக்கும். நாம்தான் நமக்கான, இறைவன் அனுப்பும் தூதரைக் கண்டறிய வேண்டும். அவர் நம்மைத் தேடி வர மாட்டார். தேடல் மிகுந்து மிகுந்து, இடையூறுகள் தாண்டி ஒரு வழியாக நம் பாதையை நாம் அடைவதற்குள், அனுபவங்கள் நிறைந்து வயதாகி விடுகிறோம். ஆனால் நமது சரியான பாதையை அடையும் போது பதின்களில் வழிமாறிய இடத்திலேயே காலமும் பிரபஞ்சமும் நம்மைச் சேர்க்கிறது. கிட்டத்தட்ட மீண்டு, வாழும் ஓர் அனுபவம். இங்கிருந்து சரியாக வாழ்க்கையை வாழ வேண்டும். இந்த அனுபவம் கூட அனைவருக்கும் வாய்ப்பதில்லை. கடைசி வரை தனக்கான பாதையைக் கண்டுபிடிக்காமலே வாழ்ந்து மடிந்தவர்களும் உண்டு. இப்போதைய என்னுடைய புரிதல் வாழ்வைப் பற்றி.

Thursday, March 29

பரீட்சை முடிந்தவுடன்......(?)

பெற்றோர் தொல்லையில் இருந்து
பெறுவதாய் இருந்த சுதந்திரம் இன்னும் 
பலநாள் கழித்தே வரும் என்ற
கவலைதான் முதலிடத்தில்.
 
தொலைக்காட்சி, கைப்பேசி எல்லாம்
கனவில் வந்து கைக்காட்டி செல்கின்றன,
 
தோழியருடன் ஊர் சுற்ற போட்ட
திட்டங்கள் எல்லாம் கிடப்பில்.
 
பாட்டி தாத்தாவைப் பார்க்க எடுத்த பயணச்சீட்டு
பல்லை இளிக்கின்றது என்னைக் கண்டு!!
 
இரண்டு தினம் முன் இந்தப் பரீட்சைக்காய்
இரவு முழுதும் கண்விழித்த
என்னை நேர்கொண்டு காண இயலா..
குற்ற உணர்வுடன்
அம்மாவும் அப்பாவும் ..
 
"விடம்மா.. கணிதம்தானே,
மீண்டும் எழுதலாம்"
ஆறுதல் நான் சொல்ல
ம்மா
அமைதியாய் நகர்ந்து செல்லும் தருணம்
இனி எப்போது கிடைக்கும்?
 
பத்தாம் வகுப்பு முடிந்தவுடன்
உலகமே நம் காலடியில்
விழுந்தது எண்ணத்தில் அடி.
 
என்ன புலம்பி என்ன புண்ணியம்?
எடு மீண்டும் கணிதப் புத்தகத்தை.
 
"இடுக்கண் வருங்கால் நகுக".
குறள் சொல்லிப் புன்னகைக்கிறார் வள்ளுவர் தாத்தா.
ஆம் தாத்தா..
சத்தமாக நகைக்கிறோம்..
மௌனமாகவே புலம்புகிறோம்.
நல்லவேளை
ஐந்தில் இல்லாமல் ஒன்றில் மட்டுமே
மீண்டும் சோதனை.
 
 

Saturday, March 3

என் பெண்ணிற்கு.....

"பத்தாம் வகுப்புத் தானே படிக்கிறாய்
பயம் எதற்கு உனக்கு?

மதிப்பெண் ஒன்றிரண்டு குறைந்தால் என்ன
மதிப்பிழக்க மாட்டாய் நீ.

வராத படிப்பை வாவாவெனஅழைத்து
வாழ மறந்து விடாதே..

பத்தில்  விட்டதை அடுத் தடுத்த
வகுப்பில் பிடித்து விடு.

எட்டாக் கனியல்ல வெற்றி எம்பினால்
எட்டிவிடும் உயரம் தான்.

பத்தோடு முடிவ தில்லை வாழ்க்கை."

என்றெல்லாம் உன்னிடம் சொல்லவே ஆசை..

என்னை விட அதிகம் உன்னைப் பற்றி
கவலை கொள்ளும் ஊருக்கு
என்ன கூறி தேற்றுவேன்?

உனக்காக இல்லாவிடினும்
எனக்காக இல்லாவிடினும்
உலகிற்காக எடுத்துவிடு
கௌரவமாய் மதிப்பெண்களை...

தேர்வு எழுதும் மாணவமணிகளின் பெற்றோர் அனைவருக்கும் எனது
வாழ்த்துக்கள்...

Monday, February 5

ஆன்மீகமும் காதலும்


            இப்போது தமிழ்நாட்டில் படாதபாடு படும் வார்த்தைகளில் முதன்மையானது ஆன்மீகம் என்ற வார்த்தைதான். ஆன்மீகம் என்றால் என்ன? அது ஓர் உன்னத உணர்வு. காதலைப் போல. உன்னதமான ஆன்மீக நிலையை அடைந்தவர்களுக்கு எவ்வித மார்க்கமும்  தேவைப்படாது. ஆனால் அதனை முழுமையாக உணர்ந்தவர்கள் மிகச்சிலரே. ஆன்மீக நிலையை அடைந்தவர்களின் அடையாளமாக வெளித் தெரிவது, அவர்களின் உள்ளும் புறமும் அற்ற உண்மை அன்பே. அதாவது உண்மையில் எவனொருவன் பிறரை நேசித்து, அவர்களின் மேம்பாட்டிற்காக உழைக்கிறானோ அவனே மிகச் சிறந்த ஆன்மீகவாதி. அத்தகைய ஆன்மீக உணர்வை அடைவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட வழிகளில் ஒன்றுதான் பக்தி மார்க்கம். ஆன்மீகம்(Spiritual) என்பதும் தெய்வீகம்(Devotional) என்பதும் வேறு வேறு என்பது வாதிடுபவர்களுக்குப் புரிந்தே இருக்கின்றது.
இன்று  கடவுளை மறுப்பவர்கள், ஆன்மீகம் என்ற ஒன்று  இல்லை என்பது எப்படி இருக்கிறது தெரியுமா? அன்பே சிவம் படத்தில் கமல் ஒரு வசனம் சொல்வார். “தாஜ்மஹால் இல்லைன்னா காதலே இல்லைன்னு சொல்வீங்களா?” அதுபோல நீங்க கடவுள் அல்லது இறைமை என்பதை உணரவில்லை என்பதற்காக ஆன்மீகம் என்ற உணர்வே இல்லை என்று வாதிடுவது முறையல்ல. இந்து மதம் என்ற மதமே இல்லை என்பதுதான் பலரின் வாதம். இருக்கட்டும். ஆனால் பல்வேறு விதமான புராண கதைகளை மக்கள் செவிவழிக் கதைகளாக, ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்பி வருகிறார்கள். எவை காலங்கடந்து நிற்கிறதோ, அவற்றைக் காலம் மக்களுக்காகப் போற்றி வருகிறது என்பதே மெய். இந்து மதம் இல்லை என்ற வாதத்தினை வைப்பவர்கள் கூட சைவம், வைணவம் என்ற இரண்டு த‍த்துவங்களை மறுக்க இயலாது.
கடவுளை நம்புவோர் பக்தி மார்க்கத்தின் மூலமும், நம்பாதோர் வேறு ஏதோ மார்க்கத்தின் மூலமும் ஆன்மீகத் தேடலில் இறங்கலாம். இதற்கு மதங்கள் ஒரு பாதை, அவ்வளவே. இன,மத அடையாளங்களை விடுத்து, தினமும் திருக்குறள் கற்று வந்தாலே ஆன்மீகத்தை அடையலாம். திருக்குறளும் ஓர் ஆன்மீக நூலே. சரி, ஆன்மீகத்தால் உலகைக் காப்பாற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்புவர்களுக்கு; காப்பாற்ற முடியுமா என்பதை விட கண்டிப்பாக ஆன்மீகவாதிகளால் உலகிற்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்பதே உண்மை. இன்னும்.. தெய்வீகத்தின் முதல் படியில் மனதார கால் வைத்தவர்களால் கூட மனதாலும், சொல்லாலும், செயலாலும் மற்றவர்களைக் காயப்படுத்த முடியாது.. பின்னர் எப்படி உண்மை ஆன்மீகவாதிகள் காயப்படுத்துவார்கள்?
. அப்படி காயப்படுத்துபவர்கள் நிச்சயம் ஆன்மீகவாதிகளும் அல்லர்; ஏன்? தெய்வீகத்தன்மை கொண்டவர்கள் கூட அல்லர்; மதவாதிகள் என்று அழைப்பது கூட தவறு. மதம், தெய்வீகம் என்பதன் உண்மை பொருள் அறியாத பேதைகள் அல்லது எல்லாம் தெரிந்தும் வேண்டுமென்றே மக்களை பதைபதைக்க வைக்கும் மக்கள் விரோதிகள் என்று வேண்டுமானால் அழைக்கலாம்.  அன்றாடம் வாழ்வினைக் கடத்த ஆயிரம் முயற்சிகள் எடுத்து இன்ப, துன்பங்களுக்கு இடையில் உழன்று வரும் மிகச் சாதாரண எங்களுக்கு(எந்த மத‍த்தினராய் இருந்தாலும்) மனதிற்கு ஆறுதல் தருவது தெய்வீக வழிபாடுகளே.. அதில் ஏன் உள் நுழைகிறீர்கள்?  மத‍த்தின் பேரால் ஏன் எமக்குள் பிரிவினை உருவாக்குகிறீர்கள்? மதவாதிகள் மட்டுமல்ல, இனவாதிகளே உங்களையும் தான். மக்களுக்கு வேண்டியதை செய்துதர மறந்து இயங்கும் அரசைக் கேள்வி கேளுங்கள், மக்களை அல்ல. அதிகாரமும் பதவியும் இருந்தால் தான் நாங்கள் மக்களுக்கு உதவுவோம் என்பவர்கள் தேர்தல் சமயத்தில் மட்டும் வந்து எமக்குள் சண்டை மூட்டுங்கள். அதுவரை எங்களை நாங்களாக வாழவிடுங்கள்.
இப்படி மக்களை ஏமாற்றித் திரியும் அத்துணை பேரையும் சிறையில் அடைத்து தினமும் திருக்குறள் வகுப்பு எடுக்க வேண்டும். திருக்குறள் தந்த மொழியினைக் கொண்டே, திருக்குறளையும் கையில் வைத்துக் கொண்டு வாயில் வருவதை எல்லாம் பேசித் திரிபவர்களைக் காணும் போது................ என்னைத் திருக்குறளும், தமிழும் தடுக்கிறது.

நான் கடவுள்

 
நானாக எண்ணாமல் நீ

என்னைக் காண இயலாது;

நானாக எண்ணாமல் நீ

என்னைத் தொடர்பு கொள்ள இயலாது;

நானாக எண்ணாமல் நீ

என் இருப்பிடம் கண்டு கொள்ள இயலாது;

 நான்

கடவுளாய் உணர்கிறேன்.

...................

.................

கைப்பேசியின் கண்ணாடி முகம் உடைந்ததில்..

கைப்பேசியின்றி ஒரு வார வாழ்க்கையின்..

உணரந்த த‍த்துவம்..

இனி நான் கடவுள்...