Thursday, May 29

காதல் இல்லை என்று சொன்னால்

இன்று ஞாயிற்றுக்கிழமை. வசந்தா எப்போதும் போல் காலை டிஃபன் வேலையில் மூழ்கியிருந்தாள். காலிங்பெல் சத்தம் கேட்டது. “இந்நேரம் யாரு?” என்று யோசிப்பதற்குள் குமார் எழுந்து போய் கதவைத் திறந்தான்.

“அடடே! வா வா, என்ன திடீர் விசிட்?”

“ரொம்ப நாள் ஆச்சே! எல்லாரும் எப்படி இருக்கிறீங்கன்னு பார்த்திட்டு போகலாமேன்னு வந்தேன்.”

ரவியின் குரலைக் கேட்டதும் ஆச்சரியப்பட்ட வசந்தா கிச்சனை விட்டு வெளியே வந்தாள்.

“ஹேய் எப்படி இருக்கிற?, உன் ஆளு சௌக்கியமா? எங்கே இந்தப் பக்கம் அதிசயமா?” என்றாள்.

“அடடா! ஒரு மனுஷன் வந்தா அவனுக்குக் காஃபி கொடுப்போம், சூடா தோசை தருவோம்ன்னு இல்லாம இது என்ன கேள்வி?”

“காஃபி ஓகே! ஆனா இன்னைக்கு தோசை இல்ல உன்னோட ஃபேவரைட் ஆப்பம்” என்றபடி உள்ளே போனாள்.

“எனக்கும் ஒரு காஃபி” என்றான் குமார்.

அவள் காஃபி போட்டு வருவதற்குள் எல்லாரையும் பற்றி ஓரு அறிமுகம்.

ரவி வசந்தாவின் அத்தை பையன். இவளை விட ஒரு மாதம் சின்னவன். எப்போதாவதுதான் வசந்தாவின் வீட்டுக்கு வருவான்.

குமார், வசந்தா இருவருக்கும் திருமணமாகி நான்கு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. தினந்தோறும் வரும் செல்லச்சண்டைகள், அரிதாய் வரும் நிஜச்சண்டை என்றிருந்தாலும் அன்னியோன்யமான தம்பதிகள் தான்.

போனவாரம் இப்படித்தான். சினிமாவிற்குப் போகலாம் என்று போனார்கள். டிக்கெட் எடுக்கப் போகும் வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.

“வசு,லேடீஸ் பக்கம் கூட்டமே இல்லை, நீ போய் டிக்கெட் எடுத்துட்டு வந்துடு”

“சரி, பாப்பாவைப் பார்த்துக்கோங்க” என்றபடி போனாள். டிக்கெட் எடுத்துட்டுத் திரும்பும் போது, குமாரைக் காணோம், குழந்தை கூட ஷீபாவும், ரம்யாவும் இருந்தார்கள். இவர்கள் இருவரும் குமார் கூட வேலைப் பார்க்கும் நண்பர்களின்(ராஜா,பிரபு முறையே) மனைவிகள்.

“ஹாய் வசு, குமாரைத் தேடுறீங்களா, டிக்கெட் வாங்கப் போயிருக்கிறாரு” என்றாள் ஷீபா.
அப்பவே வசுவிற்கு எரிச்சல் வந்தாச்சு. குமார் வர 9 நிமிஷம் ஆச்சு.

“இந்தாங்க டிக்கெட்!” என்றபடி வந்தான். இவள் முகம் மாறியது அவனுக்குப் புரியவில்லை,

“வசு, நீ போகவும் இவங்க வந்தாங்க, தனியாத்தான் வந்தாங்களாம், அதான் டிக்கெட் வாங்கித்தரலாம்ன்னு... உன்னைக் கூப்பிட்டேன், நீ கவனிக்கலை. இல்லைன்னா சேர்ந்தே டிக்கெட் எடுத்திருக்கலாம்.”

டிக்கெட் காண்பிச்சிட்டு உள்ளே போனார்கள். நல்லவேளை அவர்களுக்கு கொஞ்சம் தள்ளித்தான் ஸீட். அவர்கள் இடத்தில் உட்காரும் வரை இவன் கூடவே போனான். இவள் இன்னும் கடுப்பானாள். இவளுக்கு மற்றவர்களுக்கு உதவறது எல்லாம் பிடிக்கும். ஆனா இவளைக் கண்டுக்காம அடுத்தவங்களுக்கு விழுந்து விழுந்து குமார் கவனிச்சா இவளுக்கு பிபி எகிறிடும்.

ஒரு வழியா குமார் வந்து உட்காரவும், படம் ஆரம்பிக்கவும் சரியா இருந்தது. ஒண்ணும் பேச முடியலை. இன்டெர்வல் விடவும்,

“நான் ஏதாவது வாங்கிட்டு வாரேன்” என்று சொல்லிட்டு நேரா அவர்களிடம் போனான்.

திரும்பி வரும் போது அவன் கையில் ஒரே ஒரு டீ கப் இருந்தது.

“மூணு கப் தான் கொண்டு வர முடிந்தது. நம்ம இரண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாம், பாப்பாவிற்கு ஐஸ்கிரீம் வாங்க முடியலை. நீ பிஸ்கெட் கொண்டு வந்தேல்ல, அதைக் கொடுத்துடு.”

இவளுக்கு ஏனோ படம் பார்க்கவே பிடிக்கலை. ஒரு வழியா படம் முடிந்தது.

“நீ பார்க்கிங் ஏரியாவில வெயிட் பண்ணு; நான் அவங்களுக்கு ஏதாவது ஆட்டோ அரேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்.”

சரியாக 15 நிமிடம் கழித்து வந்தான். வீடு போறவரைக்கும் இரண்டு பேரும் அமைதியாக இருந்தார்கள்.

குழந்தையை மெதுவாகக் கட்டிலில் போட்டான். உடை மாற்றிக் கொண்டே “அவங்க
இரண்டு பேரும் வந்தது உனக்குப் பிடிக்கலை, கரெக்ட்?” என்று குமார் ஆரம்பிக்கவும் இவள் அவனை முறைத்த முறையில்...

“நான் சண்டையெல்லாம் போடலை. லேடீஸ் பக்கம் கூட்டமே இல்லைன்னு சொல்லித்தானே என்னை அனுப்பினீங்க, அதே மாதிரி அவங்களையும் எடுக்கச் சொல்லியிருக்கலாமே! ஸீட் பார்த்து உட்கார அவர்களுக்குத் தெரியாதா, கூடவே போகணுமா? அடுத்து, டீ வாங்கித் தரச் சொல்லி உங்ககிட்ட கேட்டாங்களா? சரி, வாங்கிக் கொடுத்திட்டீங்க, எனக்கு ஜூஸ் ஏதாவது வாங்கிட்டு வரக் கூடாதா? வெளியில டீ,காஃபி குடிக்க மாட்டேன்னு உங்களுக்குத் தெரியாதா? அது கூட மறந்து போச்சா உங்களுக்கு? கடைசியா, வீட்டிலிருந்து அவங்களாத்தானே வந்தாங்க. இங்கிருந்து ஆட்டோ பிடிச்சுட்டு போகத் தெரியாதா? நான் பார்க்கிங்ல தனியா எவ்வளவு நேரம் நிற்கிறது? உங்க ஃப்ரெண்ட்ஸ்க்காக செய்றீங்க சரி, அவங்களும் அதே மாதிரி செய்யணுமில்ல, முந்தாநாள் கல்யாண வீட்டுல என்னை வா ன்னு கேட்டதோட சரி, நீங்க வரலைன்னு ஏதாவது ஸ்பெஷலா செஞ்சாங்களா என்ன, அவங்க பாட்டில அரட்டை அடிச்சுட்டுத்தானே இருந்தாங்க, நீங்க மட்டும் ஏன் இப்படி செய்யணும்? அதும் பொண்டாட்டி பிள்ளையைக் கண்டுக்காம?”

இவ்வளவு கேள்விகள் இருந்தன. ஆனால் அவள் வாயைத் திறக்கவில்லை. அவனே தொடர்ந்தான்.

“இதையெல்லாம் நீ தப்பான கண்ணோட்டத்தில் பார்க்காதே, ஜஸ்ட் ஒரு ஹெல்ப் அவ்வளவுதான்.”

அதோடு அவளும் விட்டு விட்டாள். என்ன பேசி என்ன புண்ணியம்? இது என் புருஷன் மேல இருக்கிற பொஸ்ஸிவ்னெஸ் ன்னு சொன்னா சிரிப்பான், அவனால இதைப் புரிஞ்சுக்க முடியாது,

காஃபி கலக்கும் போது தான் வசுவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ரவியை ஸ்பெஷலா கவனிச்சா, குமாருக்குப் பொஸ்ஸிவ்னெஸ் வராதா? அவன் புரிஞ்சுக்க மாட்டானா?

ஆனா பாவம் அவளுக்குத் தெரியலை, குமார் முகம் மாறினால் இவளால் வேறு யாரையும் ஸ்பெஷலா என்ன, சாதாரணமாகக் கூட கவனிக்க முடியாது என்று. அவன் மேல் அவளுக்கு இருக்கும் காதல் எல்லாவற்றையும் மறக்க வைத்து விடும்.

No comments:

Post a Comment