எல்லோரும் கடலில் முத்து எடுக்கும் போது நான் இப்போதுதான் கால் நனைக்கிறேன், முத்து எடுக்கும் நாளை எதிர் நோக்கி!
Thursday, April 29
குலதெய்வ வேண்டுதல்
குலதெய்வம் கோயிலுக்குகுட்டியா ஒரு மணி
வாங்கியாந்து கட்டணும்.
நேர்த்திக்கடன் நேர்ந்து
நேத்தோடு முழுசா
அது ஆச்சு ஆண்டு ஒன்று
நம்மசாமிதான் கோவிச்சிக்காது
ஆனாலும் மனசு அடிச்சுக்குது
ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்து
ஒன்பது செலவு ஒரு மாசத்துல
குட்டியாடு கிடாவாகிறதுகுள்ள
மணி வாங்கி கட்டிடணும்
குட்டிப்பையன் எட்டி எட்டி
அடிக்கிறதை ஆசைதீர
பார்த்துடணும்
அம்மா தாயே..
கொஞ்சம் பொறுத்துக்கோ
கொரானா முடியட்டும்
கோயில் திறக்கட்டும்
குட்டிமணியொன்னு
உன் கோயிலில கட்டிடுறேன்.
Friday, April 16
புலம்பல்
மூளையைக் கழட்டி
கழுவி கழுவி வைத்தலில்
மனதைக் கழுவ மறந்த
மதிகெட்டோர்
மலிந்த உலகமிது...
புகழென்னும் இச்சைக்காய்
புல்லராய் வாழ்ந்திடும்
பிறர் மனம் பாராத
எடுப்புகள் நிறைந்த
எழில்மிகு உலகமிது...
முகமூடிக்குள் வாழ்ந்தே
வாழ்வை முடித்திடலாமென
மெய்யறிவு பெறாத
பொய்யர்கள் வாழும்
பொய்யா உலகமிது...
பிறர்வாழ பொறுக்காது
புறம் பேசி புறம் பேசி
தானும் வாழாத
தண்டங்கள் வாழ்ந்திடும்
தண்ணீர்சூழ் உலகமிது...
அடுத்தவர் செய்வதை
அறிந்து கொள்ளும் ஆர்வத்தில்
தன்நிலை உயர்த்தா
பேதைமை நிறைந்த
பேரழகு உலகமிது...
தன்திறன் ஏதுமின்றி
பிறர்திறனில் வாழ்ந்து
எவரும் அறியாரென
ஏய்ப்பவர் நிறைந்த
ஏறுகொண்ட உலகமிது...
நல்லவர்போல் நடிப்பதற்கும்
நல்லவராய் வாழ்வதற்கும்
வேறுபாடு தெரியாத
விந்தைமாந்தர்
நிறைந்த உலகமிது...
இத்தனைக்குப் பிறகும்
இன்னமும் இழிசெயல்கள்
நிறுத்தாது தொடர்ந்திடும்
மடையோர்கள் கொண்ட
மடமை உலகமிது...
எத்தனைதான் கற்றாலும்
எத்தனைதான் பெற்றாலும்
திருந்திட மனமில்லா
திமிர்கொண்டோர் கூட்டம்
திரண்டிடும் உலகமிது.
நல்லோர் ஒருவருக்காய்
பெய்யும் மழையிருக்க
நாமேன் திருந்தணுமென
நயவஞ்சகர் நிறைந்த
நல்ல உலகமிது...
அசைத்து அசைத்துப் பார்த்து
அசையாத சிவமாய்
அறத்தெய்வம் இருப்பை
உணராத உயிர்நிறைந்த
உயர்வான உலகமிது...
வாழ்வின் இறுதியில்
வாட்டும் உயிர்த்துன்பம்
வந்து வந்து போகையில்
இறைவனைத் தூற்றும்
இறைநிறை உலகமிது...
யார் குத்தினால் என்ன
யார் மொத்தினால் என்ன
என்வேலை
படம் பார். கவிதை எழுது.. என
என்போன்றோரும் வாழும்
ஏற்றமிகு உலகமிது....
Friday, April 9
வண்ணமுகம்...
பாதிமுகம் வண்ணமாய்
மீதிமுகம் உண்மையாய்
பாதிமுகம் காட்டாது என்னை.கண்மூடி இருப்பவளிடம் காதல் கேட்கிறாய் .
கண்திறப்பின் உண்மை சுடுமே!
வண்ணக்கோலம் கொண்டு
முகம் மறைப்பேன்..
எதைக் கொண்டு என் எண்ணம் மறைப்பேன்?
எனக்கான காதல் நீதானா?
இன்னும் புரியாமல்தான்
கண்மூடி வண்ணம் மூடி....
காத்திருக்கிறேன்
உன் தொடுகை
எனக்குணர்த்தும் என..