Thursday, July 16

கரையறியா கடல்




பொன்னை யொத்த பொலிவுடன்
மின்னும் தங்கக் கடலே - இது
பொன்னந்தி நேரமா இல்லை
மென்காலைப் பொழுதா?

என்னை எப்போதும்
தன்னிலை மறக்கச் செய்யும்
அலைகடல் இங்ஙனம்
அமைதியாய் இருப்பதும் ஓரழகே!

அன்பான மனைவிமக்கள்
பேரன்பு பெற்றோர்
ஆருயிர் உறவுகள்
அருமைத் தோழர்கள்

தவித்தபடி தரையில் இருக்க
கரையறியா கடல்தன்னில்
கயல்களுக்காய் வலைவிரித்து
காத்திருக்கும் மீனவரே

அழகான கடலிது எமக்கு
வாழ்வுதரும் கடலிது உமக்கு
கரையறியா கடலிது எமக்கு
பொருள்தரும் கடலிது உமக்கு.

எல்லை தெரியாது சென்றுவிடாதீர்
தொல்லை வரக்கூடும் மீனவரே!
வெறுங்கையோடு திரும்புதல்
பழக்கம் தானே!

மீன்கள் இல்லையெனில்
மீண்டும் ஓர்நாள் செல்லலாம் - இன்று
மீண்டு வரவில்லை எனில்
மீண்டும் ஓர்நாள் வருமோ?


Tuesday, July 14

மலர்களின் அரசிதான் நீ மறுப்பதற்கு அல்ல..






தண்ணீரில் வளர்பவளாநீ - அல்லவே
தரையில் பூப்பவள்தானே நீ
தானாய் நீட்டி வளர்ந்து
தண்ணீர் பக்கம் வந்ததேன?

உன்னழகைக் காண
ஊரே திரண்டிருக்க
உன்னழகைக் காண
உனக்கும் தோன்றியதா?

ஊருக்குப் பயந்து புனல்
அருகில் சென்று விட்டாயா
இருக்கும் இடத்தில் இருத்தல்
யாருக்கும் நன்மை அன்றோ

கவர்ந்து இழுக்கும் கவர்ச்சி
உவப்புதான் எவருக்கும்..
கவிழ்ந்தது சரிதான் எவரையும்
கவிழ்த்து விடாதவரை.

உன்னழகு சிலநாள் என
உணர்நதவர் கோடியுண்டு
நொடியில் மறையும் அழகால்
நொடிந்தவரும் கோடியுண்டு

உன்னழகைப் பாராட்டாது
உன்னிறத்தைப் புகழாது
எச்சரித்தே பாடும் என்மேல்
ஏனிந்த வெறுப்பு கண்ணே?

எப்போதும்  தோழியாய் இருக்க
என்னால் முடிவது இல்லையே
தாயாய் மாறிநிற்கும் என்
தாயுள்ளம் புரிந்துகொள்ளடி

தண்ணீர் துன்பமா
தரை துன்பமா எனில்
தண்ணீரும் அல்ல
தரையும் அல்ல

ஆசையே துன்பம்
அகந்தையே துன்பம்
அழகே துன்பம்
அனுபவமே பாடம்.

மலர்களின் அரசிதான் நீ 
மறுப்பதற்கு அல்ல...