Tuesday, September 6

இன்பம் எது?

போட்டிகளில் வெல்வதுதான் வாழ்க்கை என்பார்

போட்டியற்ற வாழ்வினை வாழ்ந்து பாராதார்.

வெல்வதுதான் மகிழ்ச்சி என்போரே அறிவீரா?..

எதனை வெல்லுதல் இன்றியமை என.


தம்புலன் வெல்லுதல், தம்செருக்கு வெல்லுதல்,

தம்புகழ் வெல்லுதல்

தம்அறிவு வெல்லுதல்

இவற்றை வென்று வாழ்ந்து பாரீர்

ஒவ்வோர் வெற்றியும் கனம் கூட்டி


மகிழ்ச்சியின் படிகளில் ஏறச் செய்யும்.

மனமாறி இன்பநிலை எட்டச் செய்யும் 

இதுவே வாழ்க்கை  இன்ப வாழ்க்கை.

இப்படி வாழ்வீர் யாவருமே!! 


Thursday, August 25

ஓடி ஓடி....

மூச்சுமுட்ட ஓடி 

முதலில் வந்தாச்சு.

கரவொலி கிறங்க வைக்க..

வெற்றிப்பெருமிதம் 

மனதில் பொங்க

சுற்றிமுற்றி பார்த்தேன்..

உலகே என்கையில் 

என்பதாய் உணர்ந்தேன்...


இளைப்பாற நேரமின்றி

கண்மூடித் திறப்பதற்குள்

மீண்டும் ஓட்டம் ஆரம்பம்.

ஓடத் தொடங்கினேன். 

முதலில் வருதலே போதையாய்...

முதலில் வருதலே தவமாய்..

ஓட்டத்திற்கு மேல் ஓட்டம்...


ஓடி ஓடிக் களைத்து

ஒடிந்து கீழே விழுந்தேன்.

நின்று நிதானமாய்

சுற்றிமுற்றி பார்க்கிறேன்..

உலகு என் கையிலிருந்து

நழுவி எங்கோ போயிற்று..

உணர்வற்று இருந்தேன்.

இப்போதும் கரவொலி .

எனக்கல்ல அவ்வொலி.


Tuesday, August 16

கோப்பை குழம்பி

குழம்பும் மனதை 

குழம்பிக் கோப்பை நிரப்பி

தெளிவாக்கும் தோழமை

கிட்டட்டும் யாவருக்கும்!


குழம்பும் மனதை

குழம்பிக் கோப்பை நிரப்பி 

பேசவைக்கும்

தோழமை 

கிட்டட்டும் யாவருக்கும்!


குழம்பும் மனதை

குழ்ம்பிக் கோப்பை நிரப்பி

புரியா சேதியை புரிய வைக்கும் தோழமை

கிட்டட்டும் யாவருக்கும்!


குழம்பும் மனதை

குழ்ம்பிக் கோப்பை நிரப்பி

வாழ்வைக்கும் தோழமை

கிட்டட்டும் யாவருக்கும்!!!

Thursday, August 4

சதுரங்கம்

எண்ணம் #1

அரசனுக்கு அதிகாரம் இல்லை என்பர்.

அரசிக்கு நிகர் அவளே என்பர்.

அவர்கள் அறிவது இல்லை ஒருபோதும்..

அரசி வெட்டுண்டாலும்

ஆட்டம் தொடரும்.

அரசன் சூழப்பட்டாலே ஆட்டம் முடிந்துவிடும் என்பதை.


எண்ணம் #2

களம் நின்று விளையாட

கணவனை விடுவது இல்லை.

களம் விட்டுச் சென்றாலும் 

மீண்டு வருவாள் அவன்தன்னைக் காத்திடவே!!!


எண்ணம் #3

வெட்டுண்டு களம் நீங்கினும்

மீண்டு வருவாள்

தலைவன் உயிர்காக்க...

செங்களத்தின் அரசி.


Wednesday, July 20

காதலின் போக்கு

மரமும் காற்றுமாய் 

நானும் அவனும் 

.

சிலநேரம் என்னைத்

தலையாட்ட வைக்கிறான்.


சிலநேரம் என்னை

பூஉதிர்க்கச் செய்கிறான்.


சிலநேரம் என்னை 

அசைக்க முயல்கிறான்.


சிலநேரம் என்னைச்

சாய்த்தே விடுகிறான்.


அவன் இல்லாது

நான் இல்லை என்பதை 

இருவரும் உணர்கிறோம்.


அதனால்தான் இன்னும்

உரசிக் கொண்டும்

உறவு கொண்டும்

இருக்கிறோம்.

Thursday, May 26

விழியுடனான ஓர் உரையாடல் -இப்படிக்கு வண்ணத்துப்பூச்சி

மையுண்ட நீயும்

தேனுண்ட நானும் 

மயங்குவோம்..

மயக்குவோம்.


இன்று ஏனோ

உன் பார்வையில் 

ஒளியில்லை..

உயிரில்லை..


வருவேன் என்றவர்

வரவில்லையா?

வரவியலா இடம்

சென்று விட்டாரா?


பசலை பூத்த நீ

படபடக்க மறந்தாயா?

உன் நாண படபடப்பே

நமக்கான ஒப்புமை.


அதனைத் தொலைத்து

எதனைப் பெறுவாய்?

சென்றதினி மீளாது

சென்றவரும் மீளார்..


படபடப்பை மீட்டெடு

பசலை போக்கு

உயிர்கொள்

உணர்வு பெறு


எவரும் இல்லை

என எண்ணும் போது

நான் மீண்டும் வருவேன்.

உனை மீட்டுத் தருவேன்.

Tuesday, April 19

என்னுடைய பெரிய அண்ணன்.


ஆறே ஆண்டுகள் மூத்தவன்.
ஆனாலும் அப்பன்போல்
அறிவு தந்தவன்.

வாசித்தலையும் எழுதுதலையும்
மூச்சாகக் கொண்டவன்.
எனக்கும் மூச்சாக்கியவன்.

மனந்தளரும் போதெல்லாம்
என்னை உயரச் செய்யும்
இறைமையோடு உடன்நிற்பாள்.
என் தமிழன்னை.

அத்தமிழை என்னுள்ளும்
என்னை அத்தமிழிலும்
மூழ்கச் செய்தது
அவன்தந்த அறிவு.

இன்னமும் எனக்கு அவன்
அள்ளி அள்ளித் தருவது
அறிவைத்தான்.

ஒருபோதும் பிறர்நோக பேசாதவன்.
ஆனாலும் அவன் சொல்தாண்டி
எவரும் ஏதும் செய்ததில்லை.

ஏனோ பணம்ஈட்ட
விரும்பாதவன்.
அதனாலேயே பலரால்
விரும்பப்படாதவன்.

பணமிருந்தால் தலையில்..
இல்லையெனில் தரையினில்...
என்னும் உலகில்
அவனுடைய கூட்டத்தோடு
தனித்திருப்பவன்.

அண்ணனானால் என்ன
"வாழ்த்த வயதில்லை"
என்று சொல்லி வாழ்த்துவமே!
வாழிய பல்லாண்டு!!!

Monday, April 11

பின்னர் நான் யார்?

கண்கவர் ஆடையும் 

கையில் கோலும்

கொண்டவள்தான் தேவதையெனில்

பின்னர் நான்  யார்?


நைட்டியும் சேலையும்

அணிந்துகொண்டு

அழும் குழந்தையை

அமர்த்துவதில் தொடங்கி

அறுசுவை உணவை

ஆக்குவது வரை

மாயங்கள்பல செய்யும்

நான் யார்?


படிக்கும் குழந்தை முதல்

பேறுகால குழந்தை வரை

அழைக்கும் ஒரே தேவதை

நான் அல்லவா?


என்னை விட்டு இவர்கள்

பாடும் பெண் எவரோ?


ஓஓஓ அதுவும் நான்தான்!!!

குழந்தைகளின் பார்வையில் ....


அம்மா என்னும் தேவதை

Wednesday, March 23

மெய்வரிசை

வரிசையில்தான் 

நிற்பதுபோல் தோன்றும்.

வரிசையும் மாறிடக் கூடும்.


முன்னிற்பவர் பின்னேயும்

பின்னிற்பவர்

முன்னேயும்

மறைந்திடக்கூடும்.


வரிசை எண் தரப்படாத

வரிசையும் இதுதான்.

எவரும் முந்திச்செல்ல விரும்பா

வரிசையும் இதுதான்.


நமக்கான நேரம் 

வந்து விட்டது எனும்போது வராது.

வரவே வராது என்றாடும்போது

வந்து விடும்.


அடங்கவும் மாட்டோம்;

அறிந்திடவும் மாட்டோம்;

நேரம் வரும்போது

அழுதே புலம்புவோம்;


எத்தனை பிறவியெடுத்தென்ன

எதனையும் கற்காது

ஆட்டத்தைத் தொடருவோம். 

Thursday, February 24

அப்பாவின் சைக்கிள் 

பெற்ற ஐந்தில் 

 பெண்ணிரண்டும் கடைசியாய். 

பெருமையும் பெருமிதமும்

 பொங்கியது மனதில். 


 புகழ்பெற்ற பள்ளியில் 

என்னைச் சேர்த்தாச்சு. 

பேருந்தும் சரியல்ல. 

ஆட்டோவும் அப்போதில்லை.


 பள்ளியோ பதினெண் கிமீ தள்ளி

மிதிவண்டிதான் ஒரேவழி. 

காலை மாலை இருநேரமும்

தனியொரு ஆளாய் மிதித்தபடி.


 மூன்று வருடங்கழித்து 

என் தங்கையும் 

 அதே பள்ளியில். 

மூவரையும் சுமந்தபடி ஒருவருடம்.


 இப்போது நினைத்தாலும் 

மலைத்துப் போகிறேன். 

எப்படியென்று.


 லொடலொடவென்று சத்தமிட்டாலும் 

பிள்ளைகள் வளர்ந்து

 ஆளுக்கொரு வண்டி 

 வாங்கிய பின்னும். 


 இன்னும் மிதிவண்டி

 மிதித்தபடிதான் 

அப்பாவின் வாழ்க்கை. 


எனக்கும் மிதிவண்டியெனில்

அப்பாவின் வண்டி மட்டுமே 

நினைவிலுண்டு. 

Monday, February 21

மனம் போனபடி...

 மனம் தான் குழப்புகிறது. 

தெளிவும் படுத்துகிறது. 

கோபப்படச் செய்கிறது. 

ஆறுதலும் தருகிறது. 


 புலம்ப வைக்கிறது.

 மகிழவும் வைக்கிறது. 

செருக்கு கொள்கிறது. 

கூனி குறுகவும் வைக்கிறது.


 கூத்தும் கும்மாளமுமாய்

 குத்தாட்டம் போட வைக்கிறது.

 எதுவும் வேண்டாம் 

என தள்ளியும் விடுகிறது.


 அறிவின் பாலும் செல்கிறது.

விருப்பின் பின்னும் விரைகிறது.

 

 இன்றுவரை 

நல்லதோ கெட்டதோ 

 மனம் போன படியே போகிறேன்.


 குட்டும் திட்டும் விழுந்தால் கூட 

அப்படியே தான் இருக்கிறேன்.

 பாராட்டு வரும்போதும் 

அப்படியே.


.மனம்படி வாழ்தலில், 

நல்லபெயரை விட 

 கெட்டபெயர் எளிதில் வரும். 

ஆனால் மனம்

இன்பமாக இருக்கும். 


 நம்பிக்கை இல்லையா? 

வாழ்ந்து பாருங்களேன்.