Friday, April 16

புலம்பல்



மூளையைக் கழட்டி
கழுவி கழுவி வைத்தலில்
மனதைக் கழுவ மறந்த
மதிகெட்டோர் 
மலிந்த உலகமிது...

 புகழென்னும் இச்சைக்காய்
 புல்லராய் வாழ்ந்திடும் 
பிறர் மனம் பாராத 
எடுப்புகள் நிறைந்த 
எழில்மிகு உலகமிது...

 முகமூடிக்குள் வாழ்ந்தே 
வாழ்வை முடித்திடலாமென
 மெய்யறிவு பெறாத 
பொய்யர்கள் வாழும் 
பொய்யா உலகமிது... 

 பிறர்வாழ பொறுக்காது 
புறம் பேசி புறம் பேசி 
தானும் வாழாத 
தண்டங்கள் வாழ்ந்திடும்
தண்ணீர்சூழ் உலகமிது...

 அடுத்தவர் செய்வதை 
அறிந்து கொள்ளும் ஆர்வத்தில்
 தன்நிலை உயர்த்தா 
பேதைமை நிறைந்த 
பேரழகு உலகமிது... 

 தன்திறன் ஏதுமின்றி
பிறர்திறனில் வாழ்ந்து
 எவரும் அறியாரென 
ஏய்ப்பவர் நிறைந்த 
ஏறுகொண்ட உலகமிது...

 நல்லவர்போல் நடிப்பதற்கும்
 நல்லவராய் வாழ்வதற்கும்
 வேறுபாடு தெரியாத
 விந்தைமாந்தர் 
 நிறைந்த உலகமிது... 

 இத்தனைக்குப் பிறகும்
 இன்னமும் இழிசெயல்கள்
 நிறுத்தாது தொடர்ந்திடும்
 மடையோர்கள் கொண்ட 
மடமை உலகமிது... 

 எத்தனைதான் கற்றாலும்
 எத்தனைதான் பெற்றாலும்
 திருந்திட மனமில்லா
 திமிர்கொண்டோர் கூட்டம்
 திரண்டிடும் உலகமிது. 

 நல்லோர் ஒருவருக்காய் 
பெய்யும் மழையிருக்க 
நாமேன் திருந்தணுமென
 நயவஞ்சகர் நிறைந்த 
நல்ல உலகமிது...

 அசைத்து அசைத்துப் பார்த்து
 அசையாத சிவமாய்
அறத்தெய்வம் இருப்பை 
உணராத உயிர்நிறைந்த
உயர்வான உலகமிது... 

 வாழ்வின் இறுதியில் 
வாட்டும் உயிர்த்துன்பம் 
வந்து வந்து போகையில் 
இறைவனைத் தூற்றும்
 இறைநிறை உலகமிது...

 யார் குத்தினால் என்ன 
யார் மொத்தினால் என்ன
என்வேலை 
 படம் பார். கவிதை எழுது.. என
என்போன்றோரும் வாழும்
 ஏற்றமிகு உலகமிது....

1 comment:

Unknown said...

Super! Kohila.
We wish to have a spotless world.
May God grant our wish.

Post a Comment