Thursday, January 31

ஒருத்தனும் ஒருத்தியும்

கதவைத் திறந்து கொண்டு வேகமாக நுழைந்தவள் அதே வேகத்தில் கதவை மூடினாள். அதுவரை அடக்கி வைத்திருந்த பாரமெல்லாம் வெடிப்பது போல் அழ ஆரம்பித்தாள்.

“சந்துருவா இப்படி? அவனை நம்பினது எல்லாம் பொய்யா? நான் ஏமாந்துட்டேனா? எங்க காதலுக்குத் துரோகம் பண்ணலாமா?” மனது எத்தனையோ கேள்வி கேட்டாலும் பதில் ஒண்ணுதான். அந்த பதிலை ஏத்துக்க முடியாமல் தான் அவள் மனம் தவித்தது.

அப்போது கையிலிருந்த கைபேசி அழைத்தது. அப்போது தான் அலுவலகத்தில் விடுப்பு சொல்லாமலே வந்தது உறைத்தது. அவளுடைய பாஸ் தான் பேசினார்.

“என்னம்மா, வீட்டுக்கு போயிட்டீயா? அதையே யோசிச்சுட்டு இருக்காதே. சாதாரணமாக கூட சந்துரு அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வந்திருக்கலாம், கொஞ்சம் பொறுமையா இருந்துக்கோ, நான் நாளைக்குக் கூப்பிடுறேன்.” என்று கட் பண்ணிட்டார். செல்லை ஆஃப் செய்தாள். இப்போதைய மனநிலையில் அவளுக்கு யாரிடமும் பேச மனம் இல்லை.

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன்னால் இவளோட பாஸ் தான் சந்துருவுக்காக இவகிட்ட 1 மணிநேரம் பேசி சம்மதிக்க வைத்தார். சந்துரு அவருக்குத் தூரத்துச் சொந்தம். அதுவுமில்லாம அவனோட நல்ல குணமும், அவர்கிட்ட அவனுக்கு இருக்கிற மரியாதையும் அவனோட காதலுக்காக அவரை தூதராக்கியது.

திருமணமான இந்த இரண்டு வருடங்களில் இருவரும் “ஐ லவ் யூ” சொல்லாத நாட்கள் ஒன்றிரண்டு தான் இருக்கும். அந்த நாட்களில் கூட வேறு ஏதாவது வார்த்தைகளில் காதலைச் சொல்லியிருப்பார்கள். போன மாதம் கூட அவளோட அம்மா வந்திருந்த போது இவள் முன் மண்டியிட்டு “ஐ லவ் யூ மதி” என்று சொல்ல அம்மா வெட்கப்பட்டு உள்ளே ஓடினாள்.

‘இன்று காலையில் ஆபிஸ் போனவுடனேயே பாஸ் கூப்பிட்டு “என் கூட நீயும் கான்ஃபெரன்ஸ் வாம்மா” என்று சொன்னவுடன் போனதுதான் தப்பு. அந்த ஹோட்டலுக்குப் போகாமல் இருந்திருந்தால் நான் சந்துருவை அந்த பொண்ணோட பார்த்திருக்கவே மாட்டேன். இப்படி இடிஞ்சு போயிருக்கவும் வேண்டாம்’ . மதியால் ஒண்ணும் யோசிக்கவும் முடியலை; யோசிக்காமல் இருக்கவும் முடியலை.

“அந்த பொண்ணு யாரா இருக்கும்? பார்த்த மாதிரியே இல்லையே; அவர்கள் நடந்து போன விதமும், ரிசப்ஷனிஸ்ட் அவங்களைப் பார்த்து கையசைத்த விதமும் தினமும் வர்றவங்க மாதிரியில்ல இருந்தது. சந்துரு கிட்ட நான் எப்படி கேட்பேன்?” யோசிக்கும் போதே அவளுக்கு அழுகை வந்தது. அவளைத்தவிர இன்னொரு பொண்ணை நேசிக்க எப்படி அவனால் முடியுது? அது தாங்கிக்கிடவே முடியாத விஷயமாகத் தோன்றியது. இதைப் பற்றி அவள் யாரிடம் பேசுவாள்? இந்த 2 வருடங்களில் சந்துரு மட்டுமே அவளது நண்பனாகிப் போனான். இப்போது மதிக்கு மட்டுமல்ல இன்னோர் பொண்ணுக்கும் அவன் தான் எல்லாம் என்பதை ஏற்றுக் கொள்ளும் தைரியம்தான் அவளுக்கு இல்லை.

சந்துருவுக்கும் வேறேதோ பொண்ணுக்கும் கல்யாணம் என்றவுடன் அவசரமாக கோயிலுக்கு ஓடினாள். அங்கே சந்துரு அந்தப் பெண்ணோடு சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். இவளைக் கண்டுகொள்ளவே இல்லை. இவள் சந்துரு என்று கூப்பிடவும், ஐயர் அவன் கையில் தாலியைக் கொடுக்கவும் சரியாக இருந்தது. ‘ப்ளீஸ், வேண்டாம் சந்துரு’ என்று அழுதபடியே அவள் ஓட வழியில் இருந்த நிலைப்படி தட்டி கீழே விழ,
‘மதி எழுந்திரு, என்ன ஆச்சு?’ என்ற சந்துருவின் குரல் கேட்கவும் அவளுக்கு ஒரு நிமிடம் ஒண்ணும் புரியவில்லை.

“என்னம்மா? உன் செல்லுக்கு கூப்பிட்டால் எடுக்கலை. ஆபிஸ்ல கேட்டா, நீ வீட்டுக்கு போயாச்சுங்கிறாங்க. சரி வீட்டுக்கு கால் பண்ணினாலும் பதில் இல்லை. இப்ப என்னடான்னா இப்படி முழிக்கிற. என்ன ப்ராப்ளம்?”

தூக்க கலக்கம் முற்றிலும் கலைய, கண்டது கனவு என்பதும் புரிய மெதுவாய் எழுந்து உட்கார்ந்தாள். வாட்சைப் பார்த்தாள். மணி நான்கைத் தாண்டியிருந்தது. இரண்டு மணிநேரமாகத் தூங்கியிருக்கிறாள்.

அவள் அருகில் அமர்ந்து தலையை மெதுவாகக் கோதி விடுபவனைக் கண்டதும் மீண்டும் கண்ணில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அவள் அழுததைப் பார்த்ததும் பொறுக்க முடியாதவனாய்,

“என்னடா, விஷயம் என்ன?, எனக்குத் தெரியாம எந்த விஷயம் உன்னைக் கஷ்டப்படுத்துது? எதுவா இருந்தாலும் ஷேர் வித் மீ” என்றபடி அவள் கண்ணைத் துடைத்தான்.

சாய்ந்து கொள்ள தோள் கிடைத்தும், ஆறுதல் தேட முடியாமல் அவன் கையைத் தட்டிவிட்டாள். ஒரு நொடி யோசித்து, அவனிடமே கேட்டு விடலாம் என்று முடிவெடுத்தாள்.

“இன்னைக்குக் காலையிலே ஹோட்டல் ராம் வந்திருந்தோம். அங்கே உங்களைப் பார்த்தேன்.”

“ஹோட்டல் ராம்! ஓ! சரி, என்னைப் பார்த்ததுக்கா இவ்வளவு சோகம்? விஷயத்துக்கு வா”

அவன் கண்ணை நேராகப் பார்த்து, “உங்களைத் தனியா பார்க்கலை. கூட ஒரு பொண்ணோட பார்த்தேன். அந்தளவு நெருக்கமாக உங்க இரண்டு பேரையும் பார்த்த பிறகு எனக்கு... ”, குரலும் கண்ணும் அவளை முடிக்கவிடவில்லை. முகத்தை மூடியபடி அழ ஆரம்பித்தாள்.

“ம்...! உங்க பாஸ், அதான் என்னோட மாமா எல்லாம் சொன்னார். எப்படி உன்னாலே என்னைப்போய் சந்தேகப்பட முடியுது? குட், வெரிகுட்” என்றபடி நகர்ந்தான். சற்றுதூரம் சென்றவன் திரும்பி வந்து,

“ஆமா! அந்த பொண்ணுகூட என்னைப் பார்த்தேல்ல, அப்பவே வந்து என்கிட்டே கேட்க வேண்டியதுதானே! நீ என்னை சந்தேகப்பட்ட பிறகு நான் என்ன விளக்கம் சொன்னாலும் நீ நம்ப போறியா? நீ நம்பலைன்னாலும் ஒண்ணு சொல்றேன். ஐ லவ் யூ, ஐலவ் யூ வெரிமச், இந்த வார்த்தையை உன்னைத் தவிர வேற யார்கிட்டேயும் நான் சொன்னதே இல்லை.” என்றபடி படுக்கையில் விழுந்தான்.

ஐந்து நிமிட அமைதிக்குப் பிறகு, மெதுவாய் அவனை அழைத்தாள்.

“சந்துரு, உன்னை ரொம்ப நம்பப் போய்தானே நான் இப்படி தவிக்கிறேன். நான் உன்னை சந்தேகப்படுறது மட்டும் தான் உனக்கு தெரியுதா? அந்தப் பொண்ணு உன் தோளிலேயும், நீ அவ இடுப்பிலேயும் கை போட்டு போறீங்க! என்னால அதை எப்படி தாங்கிக்கிற முடியும்?” என்று கேட்டாள்.

சந்துரு ஒன்றும் பேசாமல் இருக்கவும், அவனை உலுக்கினாள். மெதுவாக கண்ணைத் திறந்தவன், “அவ என்னோட க்ளைண்ட், லஞ்சுக்குப் போனோம், தனியா இல்லம்மா. நாலு பேர் போனோம். இந்தம்மா கொஞ்சம் டிரிங்ஸ் எடுத்தாங்க, ஒத்துக்கலை, என்னமோ மாதிரி ஆகி நிக்கவே முடியலை. ஸோ, நான் தான் கூட்டிட்டு போய் டாக்ஸியிலே ஏத்தி விட்டேன்.” என்றான்.

இவள் பேச ஆரம்பிப்பதற்குள், “ ஆனா, நீ இதை நம்புவியான்னு எனக்குத் தெரியலை. வேணும்னா, ஹோட்டல்ல நீ யார்கிட்டேன்னாலும் என்கொயர் பண்ணிக்கலாம், நானே கூப்பிட்டுட்டு போறேன்.” என்றவாறு அவளைப் பார்த்தான்.

“சாரி சந்துரு, நான் என்ன பண்ணினா நீ என்னை மன்னிப்பே?”

“இல்லை மதி, எனக்கு மனசே சரியில்லை, நீ என்னை சந்தேகப்படுற, அப்படிங்கறதை என்னால் ஏத்துக்கவே முடியலை. என் கூட சாய்ராம் வந்தான். அவன் கூட கிண்டலா, “இப்ப மதி பார்த்தா சந்துரு தொலைஞ்சான்” அப்படின்னு சொன்னப்போ கூட நான் அவனைப் பார்த்து சிரிச்சேன்.”

“தப்புதான், ப்ளீஸ், என்னை மன்னிச்சுடுப்பா!” என்றபடி அவன் கைகளை எடுத்து தன் கன்னங்களில் வைத்தபடி மதி கெஞ்ச,

இன்னும் மன்னிக்காமல் இருக்க அவன் என்ன முட்டாளா?

“ஐ லவ் யூ” என்றான் மீண்டும் ஒருமுறை!

1 comment:

Post a Comment