Thursday, January 31

முற்றுப் பெறாத காதல்

மெதுவாக எட்டி எட்டிப் பார்த்தமானிக்கு “காமாட்சியக்கா வந்துடக்கூடாதுன்னு” சாமி கும்பிட்டபடி மரத்துக்குப் பின்னாடி நின்னிட்டு இருந்தேன்.

“ஏ! யாரை புள்ளை பார்த்துக்கிட்டே நிக்குறே?” அப்படின்ட்டு வந்தா ராசாத்தி.

“காமாட்சியக்கா தான். அவங்க வந்தா, ‘வெரசா நட, வெரசா நட’ ன்னு சொல்லிப்புட்டே இருப்பாங்க. அதான் அவங்க போனபுட்டு போகலாம்னு நிக்கேன்”. அவளுக்கு பதில் சொல்லிட்டு இருக்கும் போதே “தனம், தனம்” ன்னு அக்கா சத்தம் கேட்டுச்சு.

இப்ப என்ன பண்ண? அக்கா கூடவே போய்தான் ஆகணும்.. ஸ்கூலிலிருந்து எங்க வீட்டுக்கு நடந்து போக அரைமணி நேரம் ஆகும். ஆனா அக்காகூட வந்தா 20 நிமிஷத்துலேயே போயிருவோம். என் வீட்டுக்கு ஐஞ்சு வீடு தள்ளித்தான் காமாட்சியக்கா வீடு இருக்கிறதால அம்மை அவிக கூடத்தான் வரணும்ன்னு சொல்லியிருக்கு.

பிள்ளையார் கோயில் முக்குத் திரும்புனவுடனேயே ஒரு அண்ணாச்சி வடை, பஜ்ஜி எல்லாம் சூடா போட்டு விப்பாங்க. ஆனா அக்கா அதை வாங்கவே விடாது, அதுவுமில்லாம, வழியில ஏதாவது கடையில ஜில்லுன்னு பானைத்தண்ணி குடிக்கலாம்; பாய் கடையில டபுள் கலர் மிட்டாய் வாங்கி சாப்பிடலாம்; புதுப்பட போஸ்டர் ஒட்டியிருந்தானா வாய் பார்க்கலாம்; ஆனா அக்கா எங்கனயும் நிக்காம விறு விறுன்னு எங் கையைப் பிடிச்சிகிட்டு நடக்கும், ராசாத்தியைக் கூப்புட அவங்க அப்பா வருவாங்க, சிலநாள் என்கூட வருவா. இன்னைக்கு அவங்கப்பா வரலைங்கிறதால நானும் அவளும் போயிடலாமுன்னு இருந்தோம், அக்கா பார்த்துடுச்சு.

அக்கா கூட நீலவேணிக்காவும் வந்தாங்க. இரண்டு பேரும் பதினொண்ணாப்பு படிக்கிறாங்க. நானும் ராசாத்தியும் ஐஞ்சாப்பு படிக்கிறோம் அவிக ரெண்டு பேரும் பேசுறது எங்க ரெண்டு பேருக்கும் தெரியக்கூடாதென்னு எப்பவும் குசுகுசுன்னு பேசிட்டே தான் வருவாங்க. எனக்கா தெரியாது, எங்க வளவில இருக்குற குமார் அண்ணனும் காமாட்சியக்காவும் ரகசியமாகப் பாத்துக்கிடதும், சிரிச்சுக்கிடதும். நீலவேணிக்கா வீடு புட்டாரத்தியம்மன் கோயில் தெருங்கிறதால அவங்க அங்ஙனயே திரும்பிடுவாங்க. ராசாத்தியும் குத்தாலரோடுமுக்குல திரும்பிடுவா. அதனால எங்க தெருவில போறப்போ நானும் அக்காவும் தான் போவோம்.

எங்க தெரு வார்ற வரைக்கும் அக்கா விறுவிறுன்னு நடக்கும். தெரு திரும்பிட்டோம்... அம்புட்டுதேன், அக்கா வேற அக்காவா மாறிடும். அக்கா பார்க்க அம்புட்டு அழகா இருக்கும். குமார் அண்ணனும் நல்லாத்தான் இருப்பாங்க. ஆனா அக்காகிட்டே பார்க்கும் போது சுமார்தான். தெருமுக்குத் திரும்பும் போதே அரிசி மண்டி கிட்டே இருந்து அண்ணன் பின்னாடி வர ஆரம்பிச்சுருவாங்க. அக்காவும் திரும்பித் திரும்பி பார்த்துட்டே வருவாங்க. அவங்க கண்ணிலே அப்படி ஒரு சந்தோஷம் தெரியும். எங்க வளவுகிட்டே வரும் போது குமார்அண்ணன் எங்ககூடவே வந்துடுவாங்க. எங்கூட பேசிற மாதிரி அவுக இரண்டு பேரும் பேசிக்கிருவாங்க.


இன்னைக்கும் நானும் அக்காவும் விறுவிறுன்னு நடந்து வந்துட்டோம். எனக்கு எப்பவுமே அக்கா கையைப் புடிச்சுட்டு நடக்க இஷ்டமே இருக்காது. அதனால தெரு வந்துட்டா கையை உதறிட்டு ஓடிடுவேன். இன்னைக்கும் அப்படித்தான், கையை உதறிட்டு ஓட ஆரம்பிச்சேன். ஆனா தெருமுக்கு திரும்பும்போதே ஏதோ வித்தியாசமாப் பட்டுச்சு.

அக்காவைப் பார்த்தா மூஞ்சி உம்முன்னு இருக்கு. அப்பத்தான் கவனிச்சேன் குமார் அண்ணனைக் காணோம். சரிதான்னு நெனைச்சுகிட்டு வீட்டுக்கு ஓடினேன். நல்லபசி. ஆச்சி கடையில அம்மையை சுசியம் வாங்கியாற சொல்லணும்.

‘என்ன இது வீட்டுக்கிட்டே இம்புட்டு கூட்டம். வளவில நுழையவே முடியலை’. எல்லாரும் கத்தி கத்தி ஒரே அழுகை. அப்பத்தான் யாருக்கோ என்னமோ ஆச்சுன்னு வெளங்கிச்சு. ஐயையோ! அம்ம வேற நேத்து இருமிட்டே இருந்தாளே! பயத்தில யம்மா, யம்மா ன்னு கத்திட்டே போறேன். எதிர் வீட்டு மாரியம்மா அத்தைதான் என்னைக் கூட்டிட்டு அம்மாகிட்ட போச்சு. நல்லவேளை அம்மைக்கி ஒண்ணும் இல்லை.

அம்மையை இறுக்கக் கட்டிபிடிச்சுகிட்டேன். அப்ப, காமாட்சியக்காவும் வந்துட்டாங்க.

“என்ன மதினி, என்னாச்சு?” ன்னு அம்ம கையைப் பிடிச்சுகிட்டாங்க.

“நம்ம பழனிஅண்ணாச்சி இரண்டாவது மவன் இல்ல, அதாம்மா, குமார், அவன், பெரியவன் ஏதோ ஏசிட்டான்னு மருந்து குடிச்சிட்டான். ஹைகிரவுண்டு தூக்கிட்டு போனாங்க. வழியிலேயே... இன்னும் வீட்டுக்கு வரல” என்றபடி அழ ஆரம்பிச்சுட்டா.

எனக்கும் அழுகையா வந்தது, அக்காவை பாக்கவே முடியலை. நான் ரொம்ப அழவும்,
“ஏம்மா, காமாட்சி, தனம் ரொம்ப அழுறா. ஒண்ணுமண்ணா பழகின பயல்ல, ‘அண்ணே அண்ணே’ ன்னு பின்னாடியே சுத்திட்டு இருப்பா! நீ கொஞ்சம் அவளை உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ! அங்ஙனயே தூங்கினாத் தூங்கட்டும். நான் இங்கே குமாரம்மா கூட இருக்கேன்”

அக்காவும் அழுதுட்டே சரின்னு சொல்லிச்சு. எனக்கு இப்ப அக்காவோட கையைப் பிடிக்கணும் போல இருந்துச்சு. கையை இறுக்கி பிடிச்சிகிட்டேன்.

5 comments:

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

Testing...

Anonymous said...

நல்ல இயல்பா இருக்குங்க. கொஞ்சமே ஏன் இப்படின்னு ஒரு கேள்வியும் கூட!

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

///"நல்ல இயல்பா இருக்குங்க.கொஞ்சமே ஏன் இப்படின்னு ஒரு கேள்வியும் கூட!"///


(இலவசக்கொத்தனார் மன்னிக்கவும், என்னுடைய blog இல் சில பிரச்னைகள் வந்ததால் உங்களின் மறுமொழியை உடனே பதிவிட முடியவில்லை.)

ரொம்ப நன்றி இலவசக்கொத்தனார்.
கேள்வி எதுக்கு என்று புரியவில்லை. கதையிலா, நடையிலா (கதை எழுதப் பழகிக் கொண்டிருப்பதால்)

வசந்தம் ரவி said...

அசத்தலாக இருகிறது ப்லொக்

பாச மலர் / Paasa Malar said...

அருமையான இயல்பான நடை...

Post a Comment