Saturday, March 3

என் பெண்ணிற்கு.....

"பத்தாம் வகுப்புத் தானே படிக்கிறாய்
பயம் எதற்கு உனக்கு?

மதிப்பெண் ஒன்றிரண்டு குறைந்தால் என்ன
மதிப்பிழக்க மாட்டாய் நீ.

வராத படிப்பை வாவாவெனஅழைத்து
வாழ மறந்து விடாதே..

பத்தில்  விட்டதை அடுத் தடுத்த
வகுப்பில் பிடித்து விடு.

எட்டாக் கனியல்ல வெற்றி எம்பினால்
எட்டிவிடும் உயரம் தான்.

பத்தோடு முடிவ தில்லை வாழ்க்கை."

என்றெல்லாம் உன்னிடம் சொல்லவே ஆசை..

என்னை விட அதிகம் உன்னைப் பற்றி
கவலை கொள்ளும் ஊருக்கு
என்ன கூறி தேற்றுவேன்?

உனக்காக இல்லாவிடினும்
எனக்காக இல்லாவிடினும்
உலகிற்காக எடுத்துவிடு
கௌரவமாய் மதிப்பெண்களை...

தேர்வு எழுதும் மாணவமணிகளின் பெற்றோர் அனைவருக்கும் எனது
வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment