Wednesday, November 13

வேண்டும் தனிமை...

அறுபதில் தொடங்கி
ஆயுள் முழுதும் தொடரும்
தனிமை வேண்டாம்..

இளமையாய் உணரும்
இத்தருணத்தில்
வேண்டும் தனிமை.

ஒரு மண்டலமோ 21 நாட்களோ அல்ல.
வெறும் இரண்டே நாட்கள்.
வெறுமை உணர
வேண்டும் தனிமை.

மணி ஆறாச்சே என
மனம் பதறாது ..
இன்னும் சிறிது நேரம்
கண்மூடி உறங்க
வேண்டும் தனிமை.

பள்ளியில் படித்தவற்றையெல்லாம்
மறந்து விட்ட காலத்தில்
பெண்ணிற்காய் ஒருமுறை
பையனுக்காய் ஒரு முறை என
மீண்டும் மீண்டும் படிப்பதிலிருந்து
மீள்வதற்காய்
வேண்டும் தனிமை.

பிடித்த நூல்
நூறுபக்கம் இருந்தால் என்ன
ஐந்நூறு பக்கம் இருந்தால் என்ன
எடுத்த நூலைக் கீழே வைக்காது
முடித்துவிட
வேண்டும் தனிமை

ஆடல், பாடல் என
அக்கம்பக்கம் காணாது
நினைத்தவற்றை
நினைத்த பொழுதில்
 செய்து மகிழ
வேண்டும் தனிமை.

கொழுநன் பசியாற்ற
குழந்தை பசியாற்ற என
பார்த்து பார்த்து சமைத்திடாது
என் பசிக்கு மட்டும்
கொஞ்சம் கொறித்திட
வேண்டும் தனிமை.

கோழி பிரியாணியா
இல்லை அவியல் சாம்பாரா
அப்பப்பா எதுவுமே வேண்டாம்
கொஞ்சம் காஃபி மட்டும்
என்று ரசித்திட
வேண்டும் தனிமை.

குமந்தைகளுக்கும் கணவனுக்கும் இருநாட்கள் மட்டும்
என்னிடமிருந்து
விடுமுறையளித்து
விருப்பம் போல இருங்கள் என
வாழ்த்தி
என் விருப்பமாய் வாழ்ந்திட
வேண்டும் தனிமை.

பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க அல்ல.
பொறுப்புகளை இன்னும்
சிறப்பான தாக்க
இருநாள் மட்டும்
வேண்டும் தனிமை.

ஒன்றும் செய்யாது
மூச்சு விடுதல் மட்டுமே
இன்றைய வேலை
என்று வாழ்ந்திட
வேண்டும் தனிமை.

---கோகிலவாணி கார்த்திகேயன்---
12-11-2019

1 comment:

Unknown said...

Arumai. En ennangalai ungal ezhuthukkalin vadivil paarkkiren - Gayathri, Kovai

Post a Comment