Thursday, August 27

எனக்கானது என்றிருந்தேன்

கருவறையில் குடியிருந்தேன். 

இவ்வறை எனக்கானது என்று. 

முன்னும் பின்னும் குழவிகள் 

வந்து போனது அறியாமல்.. 

 பத்து மாதத்தில் தள்ளிவிட்டனர் 

வெளியே தாயென்றாலும் 

வாயும் வயிறும் வேறுதானே.


 பள்ளிமுழுதும் 

 எனக்கானது என்றிருந்தேன். 

அகவை பதினெட்டானதும் 

தள்ளி விட்டனர் வெளியே.


 இப்போது விழுந்த இடம் கல்லூரி.. 

வெறும் மூன்று ஆண்டுகள். 

தள்ளி விட்டனர் வெளியே.


 அப்பாடா இது எனக்கானதுதான் 

என்று என்வீட்டில் அமர.. 

அங்கிருந்து கூட 

தள்ளிவிட்டனர் வெளியே


இப்போது புகுந்ததோ 

புகுந்த வீடு..புது வீடு.. 

 ஒருவழியாக இதுதான்

 எனக்கானது என்றிருந்தேன். 

பத்தே வருடங்கள் தான்.... 

கிளம்பு காற்று வரட்டும் 

என்று தள்ளி விட்டனர் வெளியே..


 இம்முறை என்னால் தனியே 

பயணப்பட முடியவில்லை. 

நால்வர் உடன்வர. 

பயணம் இனிதே தொடங்குகிறது..

 சென்ற பின்புதான் தெரியும்

 அவ்விடமாவது 

எனக்கானதுதானா என்று..


No comments:

Post a Comment